கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோட்டே பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஏ.எஸ்.பி. லியனகேவுக்கு சொந்தமான பீகொக் மாளிகை என்ற பெயரில் அழைக்கப்படும் மாளிகையை கொள்வனவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இந்த மாளிகையை தான் மகிந்த ராஜபக்சவுக்கு இலவசமாக வழங்கியதாக லியனகே கடந்த வாரம் ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள லியனகே, அந்த மாளிகையை இலவசமாக வழங்கியிருப்பார் என்பதை நம்ப முடியாது என அவரது வர்த்தகத்துடன் சம்பந்தப்படட நபர்கள் கூறியுள்ளனர். மாதம் 4 லட்சம் ரூபா வாடகைக்கு விடப்பட்டிருந்த பீக்கொக் மாளிகையை எந்த விதத்திலும் இலவசமாக கொடுத்திருக்க மாட்டார் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை ஜோதிடர் ஒருவரின் ஆலோசனையின்படி பீக்கொக் மாளிகையில் உள்ள நீச்சல் தடாகம் மகிந்த ராஜபக்சவின் ஜாதகத்திற்கு ஏற்றால் போல் மாற்றியமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் எட்டு வருடங்களில் மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமாகும் வகையிலான உடன்பாட்டில் பிக்கொக் மாளிகை வழங்கப்பட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது.
கொழும்பில் உள்ள இரண்டு அலங்கரிக்கப்பட்ட மாளிகையில் பீகொக் மாளிகையும் ஒன்றென அடையாளம் காணப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ஜனாதிபதி மாளிகையுடன் அலரி மாளிகையையும் பயன்படுத்தி வந்ததுடன் நாட்டில் பல பிரதேசங்களில் புதிதாக ஜனாதிபதி மாளிகைகளை கட்டுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment