கொழும்பு: சீகிரிய குன்றில் இருக்கும் கிறுக்கல் பாக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 27 வயதான மட்டக்களப்பு யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த சின்னத்தம்பி உதய ஸ்ரீ என்ற இந்த பெண் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி அவர் தொழில் புரியும் ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களுடன் சுற்றுலாப் பயணம் சென்றிருந்தார்.
சீகிரிய குன்றுக்கு சென்ற போது அங்கிருக்கும் கிறுக்கல் பாக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட யுவதிக்கு நீதிமன்றம் இரண்டு வருட சிறை தண்டனையை விதித்தது. தனது மகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை மீள்பரிசீலனை செய்யுமாறு அவரது தாய் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், யுவதிக்கு ஜனாதிபதியின் மன்னிப்பு கிடைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. சீகிரிய குன்றுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள ஓவியங்கள் மற்றும் பாக்களை சேதப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தும் அறிவிப்பு சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Published by

Leave a comment