கொழும்பு: திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நிதிக்குற்ற விசாரணைக்கு தேவையான வாக்குமூலத்தை வழங்குவதற்காக மிக விரைவில் இலங்கை வரவுள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் இருந்து விடுக்கப்பட்ட உத்தரவு கம்பஹாவில் உள்ள தமது அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உரிய முறையில் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது அமெரிக்காவுக்குச் சென்றுள்ள பஷில் ராஜபக் ஷ விரைவில் இலங்கை வந்தவுடன் திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நிதிக்குற்ற விசாரணைக்கு தேவையான வாக்கு மூலத்தை வழங்கவுள்ளதாகவும் இதனை அவர் தனது சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி பாலித்த பெர்னாண்டோ ஊடாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிகள் பொலிஸ் மா அதிபருக்கும் சட்டமா அதிபருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தற்சமயம் வெ ளிநாட்டில் தங்கியுள்ள பஷில் ராஜபக்ஷவிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்வதற்கான உத்தரவை கடுவலை நீதிவான் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் வழங்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
Published by
![Basil[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/12/basil1.jpg?w=129&h=150)
Leave a comment