
காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையில் கடந்த நான்காண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை நிரூபிக்க நான் தயார். எனது சவாலுக்கு முகங்கொடுக்க நீங்கள் தயாரா? என ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல பொதுச் செயலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் பகிரங்க சவால் விடுத்து ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அனுப்பியுள்ளார்.
அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஊழல் மோசடியற்ற வகையில் காத்தான்குடி நகர சபையை கடந்த நான்கு ஆண்டுகளாகச் சிறப்பாகச் செய்து வந்துள்ளதாக காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் கடந்த 24ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நகர சபை அமர்வில் தெரிவித்திருக்கிறார்.
இதனை ஊடகவியலாளர்களும் அவர்களின் பொறுப்பிலுள்ள இணையதளங்கள், அச்சு ஊடகங்களில் மிகவும் முக்கியத்துவமளித்து வெளியிட்டுள்ளனர்.
தவிசாளரின் இந்தக்கூற்றானது வெளியூர்வாசிகளுக்கு பெரிதும் வியப்பான செய்தியாக இருந்தாலும், உள்ளுர் மக்களுக்கு இது மகா பொய்யான செய்தி என்பது தெரிந்ததேயாகும்.
சிலவேளை உள்ளுர் மக்களுக்கும் இதில் சந்தேகமிருந்தால் நான் எமதூர் நகர சபையில் கடந்த நான்காண்டுகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள், மோசடிகள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகங்கள் என்பவற்றைப் பட்டியலிட்டு முன்வைக்கவும், அதுதொடர்பில் தவிசாளருடனும், ஏனைய ஆளுந்தரப்பு உறுப்பினர்களுடனும் இந்த ஊர்ப் பிரமுகர்கள் முன்னிலையில் பகிரங்கமாக நிரூபிக்கவும் தயாராக இருக்கிறேன்.
தவிசாளரின் மேற்படிக் கூற்றினைப் படித்தபோது, ‘மல நாற்றத்துடன் வருகின்ற ஒருவன், என் பின்புறம் மணக்கிறது’ என்று கூறுவதையொத்த கதையாகவே எனக்கு விளங்கியது.
இவர்கள் நகர சபையைப் பொறுப்பெடுத்தபோது திண்மக்கழிவகற்றல், மடுவம், வடிகான் பிரச்சினைகளுடன் பொறுப்பேற்றதாகவும், இவர்களின் நான்காண்டு கால ஆட்சியில் அம்மூன்று பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டிருப்பதாகவும் தவிசாளர் உளறியிருக்கிறார்.
40 கிலோ மீட்டருக்கு தமது ஆட்சிக்காலத்தில் வடிகான்களை நிர்மானித்திருப்பதாக தவிசாளர் கூறியிருப்பது என்னவோ உண்மையாக இருக்கலாம். அதனையும் நாம் சரியாக அளந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால் அந்த வடிகான்களில் கழிவு நீரும், மழைக் காலஙகளில் பெருக்கெடுத்து வரும் வெள்ள நீரும் வடிந்து ஓடுகின்றதா? கழிவு நீரும், வெள்ள நீரும் வடிந்தோட முடியாதவாறு 40 கிலோ மீட்டர் நீள வடிகான்களை இவர்கள் தமது வியாபார அரசியல் நலன் கருதிக் கட்டியிருப்பார்களே தவிர, இந்த வடிகான்களால் எமது ஊருக்கும், வரியிறுப்பாளர்களுக்கும் என்ன நன்மை கிடைத்திருக்கிறது?
இதுபோன்றுதான் இவர்களது ஏனைய விவகாரங்களும் உள்ளன. இது குறித்து எதிர்க்கட்சியான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நகர சபை உறுப்பினர்கள் சபையில் என்ன கருத்தைத் தெரிவித்தனர் என்பது தெரியவில்லை.
சபை அமர்வில் தவிசாளர் இவ்வாறெல்லாம் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைக் கூறும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சபையில் பிரசன்னமாகியே இருந்துள்ளனர். தவிசாளரின் இக்கருத்து பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏதாவது எதிர்க் கருத்துக்களைக் கூறினார்களா? என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.
என்றாலும், இந்த ஊரைத் தளமாகக் கொண்டு கடந்த பத்தாண்டுகளாக ஒரு பத்திரிகையையும் வெளியிட்டு வருகின்ற நான், கடந்த நான்காண்டு கால நகர சபை ஆட்சியில் ஏகப்பட்ட ஊழல்களும், மோசடிகளும், அதிகாரத் துஷ்பிரயோகங்களும் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவினது அரசியல் அதிகார ஒத்துழைப்புடனும், மட்டக்களப்புப் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளரின் பாரபட்சமானதும், உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படாததுமான ஒத்துழைப்புடனும் இடம்பெற்று வந்துள்ளன என்பதனை மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக விவாதித்து நிரூபிப்பதற்குத் தயாராக உள்ளேன்.
உண்மையில் தவிசாளர் சபை அமர்வில் கூறியதைப் போன்று கடந்த நான்காண்டுகளில் சிறப்பாக இந்த ஊரை நிர்வாகம் செய்திருப்பாரேயானால் அவர் எனது இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு உடனடியாக ஒரு மக்கள் மன்றத்தில் அவரது கூற்றினை நிரூபிப்பதற்கு முன்வர வேண்டும்.
நாட்டின் ஜனநாயக இறைமையைப் பேணி தனது உயிரையும் துச்சமாக மதித்து பயங்கரவாதத்தை இந்நாட்டில் இல்லாதொழித்ததுடன், நல்லாட்சி ஒன்றினை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது ஆதரவை வழங்கிய ‘ஃபீல்ட் மார்ஷல்’ சரத் பொன்சேகா அவர்களின் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டலம் சார்பில் இந்த சவாலினை நான் காத்தான்குடி நகர சபையின் சர்வாதிகாரமுள்ள தவிசாளருக்கு விடுக்கின்றேன்.
அதுமாத்திரமன்றி, இந்த நகர சபைக்கு வரிப்பணம் செலுத்துகின்ற ஒரு வரியிறுப்பாளன் நான் என்பதையும் அவர் மறுதலிக்க முடியாது. எனவே, எனது சவாலுக்கு அவர் தைரியமாக முகங்கொடுத்து அவரது எதிர்கால அரசியலை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கு முன்வர வேண்டியது அவசியமாகும்.
அவ்வாறு ஏற்றுக் கொள்ளாமல், ‘ஊழல் மோசடி செய்திருந்தால் கொழும்பிலுள்ள ஊழல் மோசடிப் பிரிவுக்குச் சென்று முறையிடுமாறு’ வரட்டுக் காரணங்களைக் கூறி இச்சவாலை ஏற்பதற்கு மறுதலிப்பாராயின் அதுவே அவரது ஊழல் மோசடிமிக்க நிர்வாகத்திற்கு போதிய ஆதாரமாகும்.
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
பொதுச் செயலாளர்,
ஜனநாயகக் கட்சி,
காத்தான்குடி மண்டலம்,
43, அப்றார் நகர் வீதி,
புதிய காத்தான்குடி – 06
Leave a comment