சிட்னி: உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் அபாரமாக ஆடியிருக்கும் அவுஸ்திரேலிய அணி, 7 விக்கெட்களை இழந்து 328 ரன்களைக் குவித்துள்ளது. இன்று சிட்னி நகரில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி, துடுப்பாட்டத்தைத் தேர்வுசெய்தது. ஆட்டம் துவங்கி சிறிது நேரத்திலேயே, நான்காவது ஓவரில் யாதவ் வீசிய பந்தில் வார்னர் ஆட்டமிழந்தார். அவர் அப்போது பன்னிரண்டு ரன்களை எடுத்திருந்தார்.
அதற்குப் பிறகு, ஃப்ளின்ச் – ஸ்மித் இணை மிக நிதானமாக ஆடியதோடு, தொடர்ந்து ரன்களைக் குவித்துவந்தது. அவுஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 197ஆக இருந்தபோது, ஸ்மித் ஆட்டமிழந்தார். 38வது ஓவரில் மக்ஸ்வெல்லும், 39வது ஓவரில் ஃப்ளின்சும் ஆட்டமிழந்தனர்.
43வது ஓவரில் க்ளார்க் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 284ஆக இருக்கும்போது ஃபாக்னர் ஆட்டமிழந்தார்.
48வது ஓவரில் ஆஸ்திரேலியா, 298 ரன்களை எடுத்திருந்தபோது வட்சன் ஆட்டமிழந்தார்.
அவுஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 105 ரன்களையும் ஃப்ளின்ச் 81 ரன்களையும் எடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலிய அணியின் ஆட்டம் முடியும்போது களத்தில் இருந்த ஜொன்சன், அபாரமாக ஆடி 9 பந்துகளில் 27 ரன்களை எடுத்தார். இந்திய அணியில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். ஷர்மா 2 விக்கெட்களையும் அஸ்வின் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
இன்றைய போட்டியில் வெல்லும் அணி, இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும். இதுவரை அவுஸ்திரேலிய அணி நான்கு முறை உலகக் கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது.இந்தியா இரு முறை உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
Published by


Leave a comment