லாஹூர்: சர்வதேச அணிகள் பாகிஸ்தானுக்கு வராமல் தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டிருந்தால், பாகிஸ்தானில் கிரிக்கெட் மரணித்துவிடும் என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் எச்சரித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு முதல் சர்வதேச அணிகள் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ஆட வருவதில்லை என்பது நினைவிருக்கலாம். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுக்கு எந்த அணியும் போகாமல் உள்ளன.
கடந்த 2009ம் ஆண்டு லாகூரில் சுற்றுப்பயணம் செய்திருந்த இலங்கை கிரிக்கெட் அணி மீது பயங்கர தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. அதில், 7 வீரர்கள் காயமடைந்தனர். பொதுமக்கள் தரப்பில் 8 பேர் கொல்லப்பட்டனர். அன்று முதல் எந்த அணியும் பாகிஸ்தானுக்கு வருவதில்லை. இதுகுறித்து பாகிஸ்தான் தலைமைப் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது…
சர்வதேச போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாமல் இருப்பது நமது நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. இப்படியே போனால் நமது கிரிக்கெட் செத்துப் போய் விடும் என நான் அஞ்சுகிறேன். ஜூனியர் அளவிலான நமது வீரர்களின் திறமை மங்கிப் போய் விடும். வெளியில் பிரகாசிக்காமல் அழிந்ந்து போய் விடும். சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் பாகிஸ்தானுக்குக் கொண்டு வர முயல வேண்டும். இந்த விஷயத்தில் பாகிஸ்தான் அரசும் உதவ முன்வர வேண்டும் என்றார் வக்கார்.
கடந்த ஆண்டு கென்யா அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் தொடரில் ஆடியது. இந்த ஆண்டு மே மாதம் சிம்பாப்வே அணியைக் கூட்டி வர முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது. உலகக் கோப்பைத் தோல்வி குறித்து வக்கார் கூறுகையில், காலிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோற்றது, நாங்கள் இன்னும் கடுமையான பயிற்சி எடுத்திருக்க வேண்டும் என்பதையே காட்டுவதாக உள்ளது. உலகக் கோப்பைத் தரத்துக்கு நாங்கள் தயாராகவில்லை என்பதையே இது காட்டுகிறது. பிற அணிகளை விட நாங்கள் மிகவும் பின்தங்கியிருந்தோம் என்பதே உண்மை.
300 ரன்களுக்கு குவிக்கக் கூடிய அளவிலான அதிரடி வீரர்கள் பாகிஸ்தான் அணிக்குத் தேவை. இதில் இனியும் தாமதம் செய்யக் கூடாது. எங்களுக்குப் பந்து வீச்சு ஒருபோதும் பிரச்சினையாகவே இருந்ததில்லை. துடுப்பாட்டம்தான் கவலையாகவே இருக்கிறது. உலகக் கோப்பையில் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினர். இதற்காகப் பெருமைப்படுகிறேன். அதேசமயம், சயீத் அஜ்மல், முகம்மது ஹபீஸ் ஆகியோர் அணியில் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டது வருத்தம் தருகிறது என்றார் வக்கார்.
Published by


Leave a comment