– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
யாழ்ப்பாணம்: ‘நல்லாட்சியை ஏற்படுத்த விரும்புகின்ற நாம், ஒற்றுமையாக, உண்மையாக, நேர்மையாக, சுயநலங்களுக்கு அப்பால் மக்களுக்கு விசுவாசமான முன்மாதிரிமிக்க அரசியலை ஏற்படுத்த முன்வரவேண்டும்.’ என யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் நிர்மானிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் தொகுதி திறப்புவிழா விவகாரம் தொடர்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேற்படி ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் நிர்மானிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் தொகுதி 19 மார்ச் 2013 அன்று மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. மேற்படி திறப்பு விழா நிகழ்வினை யாழ் ஒஸ்மானியா கல்லூரி சமூகம் ஏற்பாடு செய்ய, யாழ் வலயக் கல்விப்பணிமனை நெறியாழ்கை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாணசபை சார்பாக குறித்த திறப்பு விழாவிற்கான அழைப்பினை அய்யூப் அஸ்மின் ஆகிய நான் விடுத்திருந்தேன். இதிலே பிரதம அதிதிகளாக, கௌரவ றிசாத் பதியுத்தீன், (கைத்தொழில் வாணிப அமைச்சர்) கௌரவ விஜயகலா மகேஷ்வரன் (மகளிர் விவகார பிரதி அமைச்சர்) கௌரவ தம்பிராஜ குருகுலராஜா (வடக்கு மாகாண கல்வி அமைச்சர்) ஆகியோரும், அதிதிகளாக கௌரவ ஹுனைஸ் பாரூக் (வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்) கௌரவ முத்தலிப் பாவா பாரூக் (வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்) அகியோரும் அழைக்கப்பட்டிருந்தார்கள். மேற்படி அதிதிகளின் விபரங்கள் திறப்புவிழாவினை அடையாளப்படுத்தும் கல்வெட்டிலும் குறிப்பிடப்பட்டிருந்தன. குறித்த திறப்பு விழா பாடாசாலை சமூகத்தவரால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிதிகளின் பங்குபற்றுதலோடு திறப்பு விழா இனிதே நடைபெற்று முடிந்தது.
எனினும் குறித்த திறப்பு விழாவை மையப்படுத்தி பல்வேறுபட்ட செய்திகள் இணையத்திலும் ஏனைய ஊடகங்களின் பரப்பப்பட்டன, இவை குறித்து ஒரு தெளிவினை வழங்கும்படி பலரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இவ்விளக்கத்தை இங்கே தருகின்றேன்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) அரசியல் பண்பாடுகளுள் இவ்வாறு மக்களின் கேள்விகளுக்கு விளக்கம் தருவதும் எமது அரசியல் கடமைகளுள் ஒன்றாகும்.
“வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்களுக்கும் குறித்த திறப்புவிழாவுக்கும் என்ன தொடர்பு?” “குறித்த கட்டிடத்திற்கும் அமைச்சர் றிசாத்துக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை” என்று ஒரு நபரும் குறித்த கட்டிடம் கௌரவ அமைச்சர் றிசாத் பதியுத்தீன் அவர்களது முழுமையான முயற்சியே தவிர வேறு எவருக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று இன்னுமொரு தனிநபரும் இரு பிரசுரங்களை வெளியிட்டிருந்தனர்.
இவற்றின் அடியாக இணையச் செய்திகளும் உலாவந்தன.
யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் என தம்மை அடையாளபடுத்துவோரின் இத்தகைய சின்னத்தனமான செயல்களின் மூலம் அவர்கள் குறித்த சமூகத்திற்கு எத்தகைய தலைமைத்துவத்தை இதுவரை காலமும் வழங்கியிருக்கின்றார்கள் என்பதைக் கண்டுகொள்ளமுடியும். இவ்விடயத்தை தெளிவாக புரிந்துகொள்வதற்கு ஒரு சில விரிவான தகவல்களை வழங்குவது சிறப்பானாத அமையும்.
2003களில் சமூக கல்வி அபிவிருத்தி அமைப்பு (செடோ) என்கின்ற அமைப்பு முன்னைய நாள் யாழ் மாநகர பிரதி முதல்வர் சட்டத்தரணி எம்.எம்.எம்.றமீஸ், மற்றும் ஜனாப் எம்.எம்.அஜ்மல் ஆகியோரின் தலைமையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியை யுத்தம் முழுமையாக நிறைவடையாத நிலையிலும் மீளவும் திறந்து அது முஸ்லிம் பாடாசாலையாக இயங்குவதற்கு ஆவண செய்தார்கள். அஷ்-ஷெய்க் முபாரக் (நளீமி) யுத்தகாலத்திலும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாடாசாலையின் அதிபர் பொறுப்பை ஏற்க முன்வந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அதனை முன்கொண்டு நடாத்திச்சென்றார். 2013ம் ஆண்டு யாழ் ஒஸ்மானியா தன்னுடைய பொன்விழாவையும் கொண்டாடியது.
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் 2003 முதல் 2013 வரை அதிபராக கடமையாற்றிய அதிபர் மௌலவி முபாரக் அவர்களை ஒரே நாளில் வடக்கு மாகாணத்தின் முன்னால் ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி இடமாற்றல் வழங்கி ஒஸ்மானியாவில் இருந்து வெளியேற்றினார். இதற்கு முழுமையான பொறுப்பினை முன்னால் யாழ் மாநகரசபை உறுப்பினர் ஜனாப் சுபியான் அவர்களும் அவரது இச்செயலுக்கு பக்கவாத்தியம் பாடிய யாழ் ஒஸ்மானியாவின் பழைய மாணவர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு சிலரும் பொறுப்பேற்கவேண்டும். இன்றுவரை இப்பாடசாலை அதிபர் இல்லாது பதில் அதிபர் திரு மகேந்திர ராஜா அவர்களின் வழிநடாத்துதலில் இயங்கி வருகின்றது. கோள் மூட்டுதல், குறைகூறுதல், இட்டுக்கட்டுதல் போன்ற பண்புடைய ஒருசிலரே யாழ் ஒஸ்மானியாவை அதிபர் இல்லாத பாடசாலையாக இன்றுவரை இயங்கச் செய்திருக்கின்றார்கள் என சுருக்கமாக கூறமுடியும். பாடசாலையின் உண்மையான முன்னேற்றத்தில் அக்கறையுள்ளவர்களாக இருப்பின் இத்தகைய செயலை செய்திருக்க மாட்டார்கள். இவர்களே இப்போது பாடசாலையின் விவகாரங்கள் குறித்து விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள்.
2012ம் ஆண்டு வடக்கு மாகாணசபையின் அரசியல் நிர்வாகம் இருக்கவில்லை. அங்கே ஆளுனரின் தலைமையில் சிவில் நிர்வாகமே காணப்பட்டது. மாகாணத்தின் அரசியல் நிர்வாகம் இல்லாத காரணத்தினால் வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திகளுக்கான அரசியல் தலைமைத்துவமாக கௌரவ அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் அவர்களும், யாழ் மாவட்ட அபிவிருத்திகளுக்கான அரசியல் தலைமைத்துவமாக கௌரவ முன்னால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் செயற்பட்டார்கள். இச்சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கான கட்டிடத்தை வழங்க வடக்கு மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது. இத்தீர்மானத்திற்கு கௌரவ அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் அவர்களும் பங்களிப்புகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியில் குறித்த கட்டிடத்திற்கான அடிக்கல்லினை முன்னால் யாழ் மாநகர பிரதிமுதல்வர் சட்டத்தரணி எம்.எம்.றமீஸ் அவர்கள் நாட்டினார்கள், அதன் பின்னர் சுமார் ஒன்றரை வருடங்களின் பின்னர் நிர்மானப்பணிகள் பூர்த்தியாகிய நிலையில் குறித்த கட்டிடம் இப்போது திறந்துவைக்கப்பட்டிருக்கின்றது.
எனவே இக்கட்டிடத்தோடு பலருக்கும் தொடர்புகள் இருக்க முடியும். பாடாசாலையின் முன்னால் அதிபர் அஷ்-ஷெய்க் முபாரக் (நளீமி) உட்பட இன்னோரன்ன சமூக ஆர்வலர்களுக்கும் இக்கட்டிட நிர்மானத்துக்கும் தொடர்புகள் இருக்க முடியும், ஆனால அவர்கள் எல்லோரது பெயர்களும் கட்டிடத்திற்கான திறப்புவிழா நிகழ்வைக் குறிக்கும் நினைவுக் கல்லில் இடம்பெற வேண்டும் என எதிர்பார்ப்பது அழகான விடயமல்ல, அதே சந்தர்ப்பத்தில் அது சாத்தியமானதுவோ அல்லது நிர்வாக நடைமுறைமைகளுக்கு உட்பட்டதுவோ அல்ல இதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
வடக்கு மாகாணசபையின் முஸ்லிம் விவகாரங்களுக்கு பொறுப்பாக இருக்கின்ற உறுப்பினர் என்றவகையில் வடக்கு மாகாண ஆளுகைக்குட்பட்ட கல்வி, சுகாதாரம், காணி, விவசாயம் மீள்குடியேற்றம், உட்கட்டமைப்புகள் சார்ந்த பல்வேறு விடயங்களில் நாம் எமது கவனங்களைச் செலுத்தி வருகின்றோம். ஒஸ்மானியா கல்லூரியின் கட்டிட நிர்மான விடயங்களிலும் எனது ஈடுபாடுகள் காணப்பட்டன, அதனை ஒரு முழுமையான கட்டிடமாக நிர்மானித்து முடிப்பதில் எனது பங்களிப்புகளை நான் வழங்கியிருக்கின்றேன். இதனை பாடசாலை சமூகமும், கல்வி அமைச்சின் அதிகாரிகளும் நன்கு அறிவார்கள். அதுமாத்திரமன்றி யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்து குறித்த கல்வெட்டில் இருக்கின்ற ஒரேயொரு பெயரும் என்னுடையதுதான், இதனையும் நான் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை, இதனோடு நேரடியாகத் தொடர்புடைய முன்னால் யாழ் மாநகர பிரதி முதல்வர் எம்.எம்.எம்.றமீஸ் (சட்ட்த்தரணி) அவர்களது பெயரும் இவ்விடத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
என்னுடைய பெயர் அதில் இடம்பெறவேண்டும் என்கின்ற விருப்பத்தையும் நான் கொண்டிருக்கவில்லை, மாறாக வடக்கு மாகாணசபையின் ஆளும்தரப்பு சார்பாக வடக்கு முஸ்லிம்களின் விவகாரங்களுக்கு பொறுப்பானவராக நான் நியமிக்கப்பட்டிருக்கின்ற நடப்பு மாகாணசபையின் உறுப்பினர் என்ற காரணத்தினால் என்னுடைய பெயர் கல்வி அமைச்சினூடாகவே சிபார்சு செய்யப்பட்டிருக்கின்றது. இதனை சகிக்க முடியாத ஒரு சிலரின் விசமமான பிரச்சாரங்களே நான் முன்னர் குறிப்பிட்ட தவறான கற்பிதங்களுக்கான காரணமாக அமைந்திருக்கின்றது. கௌவர றிசாத் பதியுத்தீன் அமைச்சர் அவர்கள் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டார்கள் நான் வன்னி மாவட்ட அமைச்சர், எல்லைகளைத் தாண்டி நிதிகளை ஒதுக்கீடு செய்கின்ற நிலையில் நான் இல்லை. மாறாக என்னால் ஒரு சில வழிகாட்டல்களைப் பெற்றுத்தரமுடியும் என அவர் குறிப்பிட்டார். வடக்கின் தலைமைகள் யாழ்ப்பாண முஸ்லிம்களின் விடயத்தில் அன்போடும் கருணையோடும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்கள். இதன் மூலம் அவருக்கு யாழ்ப்பாண முஸ்லிம்களின் அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளில் இருக்கின்ற வரையரைகளை நாம் புரிந்துகொள்ள முடியுமாக இருக்கின்றது.
ஆனாலும் ஒரு சிலர் அமைச்சர் றிசாத் அவர்களின் பெயரால் யாழ்ப்பாண முஸ்லிம்களிடையே தம்முடைய நிகழ்ச்சி நிரல்களை செயல்படுத்த முயற்சிப்பதும் தற்போது புலனாகின்றது. இதன்மூலம் அவர்கள் அமைச்சர் றிசாத் அவர்களுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றார்கள், உதாரணமாக அமைச்சர் அவர்களைக் கௌரவிக்க வேண்டும் என்று அமைச்சர் அவர்களால் நியமனம் பெற்ற ஆசிரியர்களிடம் இருந்து தலா 1000.00 ரூபாய் அறவீடு செய்திருக்கின்றார்கள், பாடசாலையின் திறப்பு விழாவிற்கு பாடசாலை நிர்வாகம் செலவுகளைச் செய்திருக்க, மேலதிகமாக 15ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதர உத்தியோகத்தர்களிடம் இருந்து குறித்த நிதி சேகரிப்பு இடம்பெற்றிருக்கின்றது, குறித்த ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்துடனே குறித்த நிதியை வழங்கியிருக்கின்றார்கள். அதற்கான எவ்விதமான தேவைகளும் இருந்த்தாக எம்மால் உணர முடியவில்லை, அதுமாத்திரமன்றி அவ்வாறு சேகரிக்கப்பட்ட நிதி எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்றும் குறித்த ஆசிரியர்களுக்கும் தெரியாது. இவ்வாறான விடயங்களை அமைச்சர் அவர்கள் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார். இவ்வாறான செயற்பாடுகள் பின்னர் விமர்சனங்களாக மாற்றம் காணுகின்றன.
எனவே யாழ் ஒஸ்மானியாவின் கட்டிடத்திறப்பு விழா நிகழ்வுகள் குறித்து எழுந்துள்ள பிழையான கற்பிதங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும், யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலே எல்லா தரப்பினருடைய உதவிகளையும் நாம் பெற்றுக்கொள்தல் அவசியமாகின்றது. முரண்பாடுகளுக்கு அப்பால் உடன்பாடு காணுகின்ற ஒரு சமூகமாக யாழ்ப்பாண சமூகம் இருக்கவேண்டும் அப்போது மாத்திரம்தான் எம்மால் மீள்குடியேற்றத்தை வெற்றிகரமானதாக அமைத்துக்கொள்ள முடியும், அமைச்சர் றிசாத் அவர்கள் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு பல உதவிகளைச் செய்திருக்கின்றார் என்பதை மறுக்க முடியாது. அதேபோன்று இன்னும் பலரும் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் நல்வாழ்விற்கு பலவிதமான அர்ப்பணங்களையும், உதவிகளையும் செய்திருக்கின்றார்கள் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்தல் அவசியமாகின்றது.
எனவே நல்லாட்சி என்ற மகுடத்தோடு நாம் ஏற்படுத்த விரும்புகின்ற முன்மாதிரிமிக்க அரசியல் முறையின் அடிப்படையில் நாம் செயற்படுவதற்கு உறுதிபூணவேண்டும், ஒற்றுமையாக, உண்மையாக, நேர்மையாக, சுயநலங்களுக்கு அப்பால் மக்களுக்கு விசுவாசமான அரசியலை நாம் ஏற்படுத்துவோம். என்று நம்பிக்கை வெளியிட்டு என்னுடைய விளக்கத்தை நிறைவுசெய்கின்றேன்.’
Published by


Leave a comment