கொழும்பு: பாராளுமன்றத்தை ஏப்ரல் 23 ஆம் திகதியன்று ஆளும் கட்சி கலைக்குமாகவிருந்தால் பெரும்பான்மை பலமுடையவர்களென்ற வகையில் நாம் மாற்று யோசனைகளை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை. எனினும் புதிய தேர்தல் மறுசீரமைப்புக்கமைய பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதில் நாம் உறுதியாக இருக்கிறோமெனவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 19வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை நாம் எதிர்க்கவில்லை. எனினும் இதற்குள் உள்ளடங்கும் வகையில் தேர்தல் முறை மறுசீரமைப்பும் முன்னெடுக்க ப்பட வேண்டுமென்பதே எமது விருப்பமென அமரவீர விளக்கமளித்தார். ஆளும் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நூறு நாட்களுக்குள் அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல் மறுசீரமைப்பு ஆகியன நிறைவேற்றப்பட்ட தன் பின்னரே ஏப்ரல் 23 ஆம் திகதியன்று பாராளுமன்றம் கலைக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து விடயங்களிலும் ஆர்வம் காட்டிவரும் ஆளும்கட்சி தேர்தல் முறை மறுசீரமைப்பினை மாத்திரம் இழுத்தடிக்கின்றது.
அலட்சியமே அதற்கான காரணமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 19வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை நாம் வரவேற்கின்றோம். எனினும் தேர்தல் மறுசீரமைப்பு இல்லாத இந்த அரசியலமைப்பு சீர்திருத்தம் மக்களுக்கு பிரயோசனமற்றது. எனவே, இவை இரண்டும் ஒரே நேரத்தில் பாராளுமன்றத்தில் சட்ட மூலமாக்கப்படாமல் பாராளுமன்றத்தை கலைக்க நாம் ஒருபோதும் இடமளியோ மெனவும் அவர் கூறினார்.
Published by

Leave a comment