கொழும்பு: இந்தியா, அமெரிக்க போன்ற நாடுகளின் புலனாய்வு சேவைகளே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தன்னை தோற்கடித்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். இந்தியாவின் றோ புலனாய்வு சேவை, அமெரிக்காவின் சி.ஐ.ஏ புலனாய்வு சேவை, எம்.ஐ.6 அமைப்பு ஆகியனவே என்னை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்க நடவடிக்கை எடுத்தன.
என்னை ஆட்சியில் இருந்து அகற்றும் திட்டங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னமே ஆரம்பிக்கப்பட்டது. சீனாவுடன் எனக்கு இருந்த தொடர்புகளே இந்த சதித்திட்டம் அரங்கேற காரணமாக இருந்தது. ஜனாதிபதித் தேர்தலின் இறுதிக்கட்டத்தில் இதனை நான் அறிந்து கொண்டேன். இந்திய புலனாய்வு சேவையான றோவின் இந்த செயற்பாடுகளில் இந்திய பிரதமர் மோடிக்கு தொடர்பில்லை.
நான் புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவிருந்தேன். ஆனால், தொடர்ந்து எனக்கும் எனது குடும்பத்தினருக்கு கொடுக்கப்படும் தொந்தரவுகள் காரணமாக நான் ஒத்துழைப்புகளை வழங்கவில்லை. எங்களை சிறையில் அடைக்கும் தேவையே அரசாங்கத்திற்கு உள்ளது. எந்த சாட்சியங்களும் இல்லாமல் எமது கடவுச்சீட்டுக்களை எடுத்து கொண்டுள்ளனர்.
இப்படியான நிலைமையில் நான் எப்படி அரசியலில் இருந்து ஓய்வுபெற முடியும்?. நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக எப்போதும் கூறியதில்லை. தற்போது நான் ஓய்வெடுத்து கொண்டிருக்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த இந்திய ஊடகத்திடம் கூறியுள்ளார்.
Published by


Leave a comment