ஜனாதிபதி தலைமையில் வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்களா?

north– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

யாழ்ப்பாணம்: வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (03.03.2015) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் கச்சேரியில் இடம்பெற்றது.

இந்நிலையில் இக்கூட்டத்தில் முஸ்லிம்கள் குறித்து எவரும் பேசவில்லை என்று ஒரு செய்தி இணையத்தளங்களில் பரவிவருகின்ற நிலையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்களிடம் வினவியபோது, ‘முஸ்லிம்களாகிய நாங்கள் இக்கூட்டத்தினை மிகவும் சாதகமாகவே நோக்குகின்றோம். நிகழ்ச்சி நிரலின்படி வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் றிஷாத் பதியுதீன், அமைச்சர் ஹசன் அலி ஆகியோர் மட்டுமே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது, ஆனால் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மற்றும் அமைச்சர் ஹசன் அலி ஆகியோர் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை’ என தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

‘குறிப்பாக வடக்கு, கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீண்டகாலமாக எதிர்த்தரப்பு அரசியலேயே மேற்கொண்டு வந்திருந்தது. இந்நிலையில் கடந்த ஜானாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்போடு இணைந்து செய்கின்ற அரசியல் ஒன்றைத் தொடங்கியிருக்கின்றது. இது ஒரு சாதகமான மாற்றமாகும்.

இந்நிலையில் இதனைச் சம்பிரதாயபூர்வகாகத் தொடக்கி வைக்கின்ற ஒரு நிகழ்வாக இக்கூட்டம் மிகுந்த திட்டமிடலோடு ஒழுங்கமைப்பக்கட்டிருந்ததை இங்கு கூறவேண்டும்.

இக்கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் றிஷாத் பதியுதீன், அமைச்சர் ஹசன் அலி ஆகியோர் மட்டுமே உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன்பிரகாரம் உரைகளும் இடம்பெற்றன.

இந்நிலையில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மற்றும் அமைச்சர் ஹசன் அலி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

மிகவும் சுமுகமான அடிப்படையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், அரசாங்கம் குறித்து வடக்கு மக்களிடம் ஒரு நம்பிக்கை தோன்றியிருக்கின்றது.

முஸ்லிம்கள் விவகாரம் தொடர்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் பொதுவான ஒருசில விடயங்களைச் சுட்டிக்காட்டி உரையாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேவேளை எதிர்வரும் காலங்களில் அமைச்சு மட்டங்களில் இத்தகைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் இடம்பெறுவதற்கு வசதிகள் செய்து தரப்படும் என ஜானாதிபதி மைத்ரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார்.

மேற்படிக் கூட்டத்தினை முஸ்லிம்களாகிய நாங்கள் மிகவும் சாதகமாகவே நோக்குகின்றோம். வடக்கின் அரசியல் சூழ்நிலைகளைப் புரிந்துகொண்ட நாங்கள், அதற்கு ஏதுவான வகையில் முஸ்லிம்களுடைய விவகாரங்களை முன்னெடுத்து அதற்கான தீர்வுகளையும் பெற்று வருகின்றோம். வடக்கு முஸ்லிம்களுடைய விவகாரங்களில் பல்வேறு சாதகமான நிலைகள் உருவாகி இருக்கின்றன. ஒருசில கசப்பான நிகழ்வுகள் அவ்வப்போது எழுகின்றபோதும் அவற்றைத் தீர்ப்பதற்கு தமிழ் தலைமைகள் மனமுவர்ந்து முன்வருவதையும் நாம் காணுகின்றோம்.

இவ்வாறான சூழ்நிலையில் ஒருசில அரைவேக்காட்டு ஊடகவியலாளர்கள் சூடான செய்திகளை வழங்குகிறோம் என்ற போர்வையில் பல தவறான செய்திகளை வழங்குவதை எம்மால் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது. அந்தவகையில் குறித்த செய்திகளை வாசிப்பவர்கள் அதனுடைய நம்பகத்தன்மை குறித்தும் உண்மை நிலை குறித்தும் ஆராய்வது சிறப்பானது.’ என குறிப்பிட்டார்.

Published by

Leave a comment