உலகின் ஏழ்மையான ஜனாதிபதி விடைபெற்றார்

uruguayமொடவீடியோ: உலகின் மிக ஏழ்மையான ஜனாதிபதி என வர்ணிக்கப்படும் உருகுவே ஜனாதிபதி ஜோஸ் முஜிகா, தனது தவணைக் காலம் முடிந்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிக் கொண்டார். புதிய ஜனாதிபதியாக மருத்துவரான டபரே வஸ்குஸ் நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.

3.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட தென் அமெரிக்க நாடான உருகுவேயை ஆட்சி புரிந்த முன்னாள் கெரில்லா வீரரான 79 வயது முஜிகா, கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து விடைபெற்று தனது பழைய கார் வண்டியில் ஏறி, தான் வாழும் சிறிய பண்ணை வீட்டுக்கு சென்றார்.

uruguay

உருகுவே மக்களால் ‘பெபே’ என்று அழைக்கப்படும் முஜிகா, தனது எளிமையான வாழ்க்கை காரணமாக உலகின் மிக ஏழ்மையான ஜனாதிபதியாக வர்ணிக்கப்பட்டார். கடந்த 2010 ஆம் ஆண்டு உருகுவே ஜனாதிபதியாக பதவியேற்ற முஜிகா, ஆடம்பர ஜனாதிபதி மாளிகைக்கு செல்ல மறுத்து, தனது சிறிய பண்ணை வீட்டிலேயே தங்கி இருந்து ஆட்சி நடத்தினார்.

தலைநகர் மொடவீடியோவுக்கு புறநகர் பகுதியில் தூசுபடிந்த பாதையோடு இருக்கும் முஜிகாவின் பண்ணை வீட்டில் அவரும் அவரது மனைவியும் வாழ்ந்து வருகின்றனர். தனது பாதுகாப்பிற்காக இரு பொலிஸ் அதிகாரிகளை மாத்திரம் வைத்துக்கொண்ட அவர் மனைவியுடன் சேர்ந்து தனது பண்ணையிலும் வேலை செய்துவந்தார்.

uruguay (2)

ஜனாதிபதி பதவிக்காக கிடைக்கும் சம்பளத்தில் 90 வீதத்தை முஜிகா சமூகப் பணிகளுக்கு செலவிட்டார். “நான் ஏழையல்ல. வாழ்வதற்கு அதிகமாக சம்பாதிக்கிறார்களே அவர்கள்தான் உண்மையான ஏழைகள். எனக்கு போதுமான வருவாய் இருக்கிறது” என்று முஜிகா கடந்த 2013 இல் ஓர் செய்திச் சேவைக்கு பேட்டி அளித்திருந்தார்.

முஜிகா கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியிட்ட தனது தனிப்பட்ட சொத்து விபரத்தில், தனது 1987 வொக் வேகன் பீட்ல் ரக பழைய கார் வண்டியின் பெறுமதியான 1,800 டொலர்களை மாத்திரமே குறிப்பிட்டிருந்தார். இரண்டு ஆண்டுகளின் பின் அவர் தனது மனைவியின் சொத்து விபரத்தையும் இணைத்திருந்தார். அதில் நிலம், டிரக்டர்கள் மற்றும் வீடு ஆகியவற்றின் மொத்த பெறுமதியாக 215,000 டொலர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.

Published by

Leave a comment