காத்தான்குடி: சிரேஸ்ட ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா அவர்களை காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை கூட்டத்தில் வைத்து அதன் உறுப்பினரான மௌலவி ஒருவர் தாக்க முற்பட்டதாக ஊடகவியலாளர் மௌலவி முஸ்தபா காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு (28.2.2015 சனிக்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார்.
இது பற்றித்தெரியவருவதாவது காத்தான்குடியில் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் நிர்மானிக்கப்பட்டு வரும் முஸ்லிம்களின் வரலாறு மற்றும் தொன்மையை எடுத்துக் கூறும் அரும்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பொம்மை வடிவங்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள இஸ்லாமிய மார்க்க ரீதியான சர்ச்சை தொடர்பாக காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவில் அன்மையில் நடைபெற்ற கூட்டமொன்றின் தகவல்களை செய்தியாக ஊடகங்களில் சிரேஸ்ட ஊடகவியலாளர் மௌலவி முஸ்தபா வெளியில் கொண்டு வந்தார் என தெரிவித்து நேற்றிரவு (சனிக்கிழமை இரவு) நடைபெற்ற காத்தான்குடி ஜம்இய்யாவின் கூட்டத்தில் அங்கிருந்த உறுப்பினர் ஒருவரினால் தெரிவிக்கப்பட்டு குறித்த செய்தியை சர்ச்சையாக்கி ஊடகவியலாளர் மௌலவி முஸ்தபாவை அந்த மௌலவி தாக்க முற்பட்டுள்ளார். இதன் போது காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் கூட்டத்தில் நலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஊடகவியலாளர் மௌலவி முஸ்தபா காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளர்.
ஊடகவியலாளர் மௌலவி முஸ்தபா எழுதிய இந்தச் செய்தி தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் கூட்டத்திலும் குறித்த மௌலவி ஊடகவியலாளர் மௌலவி முஸ்தபாவை நச்சரித்து அதட்டி தாக்க முற்பட்டுள்ளார் என குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவரும் காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹியிடம் கேட்ட போது ஜம்இய்யாவின் கூட்டத்தில் முரன்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. குறித்த மௌலவி ஊடகவியலாளர் மௌலவி முஸ்தபாவை நச்சரித்து அதட்டி தாக்க முற்பட்டதை நான் அவதானித்தேன்.
எனினும் இந்த விவகாரத்தை சமாதானமாக்க முயற்சித்தும் அது முடியவில்லை எனக் கூறினார்.
இது தொடர்பாக காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் மௌலவி ஜிப்ரி மதனியிடம் கேட்ட போது இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் விசாரணையை மேற் கொள்ளவுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
சிரேஸ்ட ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா மிக நீண்ட காலமாக காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிருவாகத்தில் நிருவாக உறுப்பினராக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாசபையின் பொதுச் சபைக் கூட்டம் எதிர் வரும் 6.3.2015 வெள்ளிக்கிழமை பிற்பகள் நடைபெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a reply to Puvi M.I. Rahmathullah Cancel reply