– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் முஸ்லிம்களை சிவில் அதிகாரத்தைப் பயன்படுத்தி மீண்டும் இனச்சுத்திகரிப்பு செய்வதற்குபிரதேச செயலாளர் முயற்சிக்கின்றாரா? என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாண முஸ்லிம்களை இந்திய வீட்டுத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளாமல், மிகவும் இனரீதியாக செயற்படுகின்ற யாழ்ப்பாணம் பிரதேச செயலாளரின் செயலைக் கண்டிக்கும் விதமாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2009ம் ஆண்டு யுத்த நிறைவைத் தொடர்ந்து வடக்கில் முஸ்லிம் குடியேறத் தொடங்கினார்கள், அதே காலப்பகுதியில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மிகவும் நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் மீளவும் குடியேறினார்கள், 2011ம் ஆண்டுவரை 2,252 யாழ்ப்பாண முஸ்லிம் குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேற்றத்திற்காக பதிவுகளை மேற்கொண்டார்கள். இவர்களுக்குத் தேவையான மீள்குடியேற்ற உதவித்திட்டங்களை வழங்குகின்ற விவகாரம் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபரினாலும், பிரதேச செயலாளர்களினாலும் முன்னெடுக்கப்பட்டுவந்தது. இத்தகைய உதவித்திட்டங்கள் வழங்குகின்ற சந்தர்ப்பங்களில் குறிப்பாக யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம் அவர்கள் கடுமையான சட்ட நடைமுறைகளையும், விதிமுறைகளையும் மீள்குடியேறுகின்ற முஸ்லிம்களின் மீது பிரயோகித்து வந்தார் இதற்கு ஏராளமான நடைமுறை ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன. உலர் உணவு நிவாரணம், தற்காலிக வீட்டுத்திட்ட உதவிகள் போன்ற விடயங்களிலும், மீள்குடியேற்ற உதவி நிதித்திட்டங்களை வழங்குகின்ற விடயங்களிலும் பிரதேச செயலாளர் யாழ்ப்பாண முஸ்லிம்களை வதைத்தார் என்றே குறிப்பிடவேண்டும். அந்த சந்தர்ப்பங்களில் நாம் அவரது சட்ட நடைமுறைகளை கண்டு அவரது பக்கத்தில் நியாயங்கள் இருப்பதாக எண்ணி எமது முஸ்லிம்களை பொறுமையினைக் கடைப்பிடிக்குமாறு குறிப்பிட்டு வழிகாட்டினோம். ஆனால் இப்போது அவரது உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.
தான் எப்போதும் டக்ளஸ் தேவனந்தா அமைச்சருக்கு கட்டுப்பட்டவர் என்று காட்டிக்கொள்கின்ற குறித்த பிரதேச செயலாளர் இந்திய வீட்டுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கு பாரிய அநீதிகளை இழைத்திருக்கின்றார் என்றே கூறவேண்டும். இந்திய வீட்டுத்திட்டத்திற்கான விண்ணப்ப நடைமுறைகளை கல்லில் நார் உரிப்பது போன்று மிகக் கடினமான செயற்பாடாக மாற்றியமைத்தார். இந்திய வீட்டுத்திட்ட விண்ணப்பத்தில் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்ட ஒரேயொரு பிரதேச செயலகமாக யாழ்ப்பாணம் பிரதேச செயலகமே காணப்பட்டது, வேறு எந்த பிரதேச செயலகங்களிலும் இத்தகைய நடைமுறைகள் காணப்படவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் 320 விண்ணப்பங்களை யாழ் முஸ்லிம்கள் மிகுந்த சிரமங்களோடு பிரதேச செயலகங்களில் முன்வைத்தனர். அவற்றுள் வெறுமனே 91 விண்ணப்பங்களை மாத்திரமே பிரதேச செயலாளர் மேலதிக பரிசீலனைக்காகத் தெரிவு செய்தார். ஏனையவை விண்ணப்பம் என்ற நிலையோடு நிராகரிக்கப்பட்டன, அவை ஏன் நிராகரிக்கப்பட்டன என்று எந்த விண்ணப்பதாரிக்கும் தெரியாது. 91 விண்ணப்பங்களில் புள்ளியிடல் மூலம் 41 குடும்பங்களை மாத்திரம் தெரிவு செய்து வீட்டுத்திட்டப் பயனாளிகளாக அறிவித்தார், குறித்த 41 பயனாளிகளுள் ஜே 87 கிராம சேவையாளர் பிரிவிற்குள் 26 பயனாளிகளையும் ஜே 86 பிரிவிற்குள் 15 பயனாளிகளையும் அறிவித்து அவர்களை வீட்டுத்திடங்களை அமைப்பதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளில் ஈடுபடுமாறு பிரதேச செயலாளர் கேட்டுக்கொண்டார். இப்போது குறித்த ஜே 87 பிரிவின் 26 பயனாளிகளுள் 8 பயனாளிகளது விண்ணப்பங்களை இரத்து செய்கின்ற முன்னேற்பாடுகளை பிரதேச செயலாளர் மேற்கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறியக்கிடைக்கின்றது,
மேற்படி நடவடிக்கை சட்டவிரோதமானது என்பதோடு கீழ்த்தரமான மனிதாபிமானமற்ற செயலாகவே அமைந்திருப்பதையும் எம்மால் காணமுடிகின்றது. கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதோடு நல்லாட்சி நடைமுறைகளுக்கு சூழல் உருவாகியிருப்பதாக நாம் நம்புகின்றோம், இனவாதம் தோற்கடிக்கப்பட்டு சமூக நீதி உறுதிசெய்யப்படவேண்டும் என நாம் விரும்புகின்றோம், இவ்வாறான நல்ல சூழ்நிலைகளைக் குலைத்து, மைத்திரியின் ஆட்சியில் கலங்கத்தை ஏற்படுத்தவும், இனரீதியான முரண்பாடுகள் மைத்திரியின் நல்லாட்சி சூழலிலும் இருக்கின்றது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த பிரதேச செயலாளர் சுகுணரது தெய்வேந்திரம் முயற்சிப்பதாக நான் உணர்கின்றேன்.
எனவே மேற்படி சட்டவிரோதமான செயற்பாடுகளை மேற்கொள்கின்ற யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர், நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் அதற்கான முயற்சிகளை யாழ்ப்பாணம் முஸ்லிம் சிவில் சமூகம் முன்னெடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு நீதியை விரும்புகின்ற, நல்லிணக்கத்தை விரும்புகின்ற அனைத்து யாழ்ப்பாணத்து தமிழ் உறவுகளும் இவ்விடயத்தில் முஸ்லிம் மக்களின் நீதிக்காக குரல்கொடுக்கவேண்டும் என நான் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.
Leave a comment