பலரது தலைகளை வெட்டிக்கொன்ற அந்த ஐ.எஸ். தீவிரவாதி யாரென்று தெரிந்தது

isisலண்டன்: இஸ்லாமிய அரசு தீவிரவாத அமைப்பிடம் பிடிபட்ட மேற்குலக பணயக்கைதிகளை சிரமறுத்துக்கொல்லும் காணொளிகளில் அவற்றை செய்தவராக அடையாளப்படுத்தப்பட்ட தீவிரவாதி ஜோன் யார் என்கிற அடையாளம் தெரியவந்திருக்கிறது.

பிரிட்டனைச் சேர்ந்த இவரது பெயர் மொஹம்மத் எம்வாசி என்று தெரியவந்திருக்கிறது. மேற்கு லண்டனைச் சேர்ந்த இவர் குறித்து பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைப்புகளுக்கு சிலகாலமாகவே தெரிந்திருந்தது.

இவரது அடையாளம் மற்றும் பெயர் குறித்து கடந்த சிலகாலமாக தமக்குத் தெரிந்த தகவல்களை பாதுகாப்புப்பணிகளின் தேவைகருதி பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனங்கள் வெளியிடாமல் வைத்திருந்தன.

தீவிரவாதி ஜோன் என்று பரவலாக அழைக்கப்பட்ட எம்வாசி, பிரிட்டனைச் சேர்ந்த அலன் ஹென்னிங் மற்றும் டேவிட் ஹைன்ஸ் ஆகிய இருவர் உள்ளிட்ட வேறு மேற்குலக பணயக்கைதிகளை கழுத்தறுக்கும் காணொளிகளில் அதை செய்பவராக அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.

isis

இதற்கு முன்னர் தடை உத்தரவுக்குட்பட்ட வேறொரு சந்தேக நபருடைய கூட்டாளி இவர் என்று நம்பப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு சொமாலியாவுக்கு இவர் சென்றிருப்பதாகவும், அல்ஷபாப் அமைப்புக்கான நிதி திரட்டல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்வதற்கான கட்டமைப்புடன் தொடர்புடையவர் என்றும் நம்பப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இஸ்லாமிய அரசு வெளியிட்ட காணொளியில் இவர் முதன்முதலில் தோன்றியிருந்தார். அந்த காணொளியில் அமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் போலியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தோன்றுவதாக காட்டப்பட்டிருந்தது. அதற்குப்பிறகு ஐ எஸ் அமைப்பின் வேறுபல கொடூரமான காணொளிகளில் அவர் தோன்றியிருந்தார்.

Published by

Leave a comment