– கலாநிதி ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
கொழும்பு: இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி மைத்ரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் ஆட்சி மாற்றத்தின் ஏனைய பங்காளிக் கட்சிகளும் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க இணக்கம் கண்டுள்ளன.
கடந்த சனி ஞாயிறு தினங்களில் நீர் கொழும்பில் ஜனாதிபதி மைத்ரி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு செயலமர்வில் இது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மைத்திரி அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தினை முன் கொண்டு செல்வதற்கு அவகாசம் போதாவிடில் தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீடிக்குமாறு அவர்கள் சிபாரிசு செய்துள்ளனர்.
அதேவேளை, அரசியலமைப்பின் மீதான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படின் தற்போதிய அரசியல் கள நிலவரங்களை கருத்தில் கொண்டு ஜனாதிபதியின் அதிகாரங்களையும் பிரதமரின் அதிகாரங்களையும் சமநிலையில் பேணுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முடக்கப்பட்டிருந்த அரசியமைப்பின் மீதான 17 ஆவது சீர்திருத்தத்தை முழுமையாக வலுப்பெறச் செய்தல் சுயாதீன கமிஷன்களை நியமித்தல் அவசியம் என்பதில் அவர்கள் போறன் உடன்பாடுகளை தெரிவித்துள்ளனர்.
என்றாலும், தேர்தல் முறை மாற்றங்களும், தொகுதிகள் மீள் நிர்ணயமும் இடம் பெற்ற பின்னரே பொதுத் தேர்தல் இடம் பெறவேண்டும் என்றும் அங்கு வலியுறுத்தப் பட்டுள்ளது. கால அவகாசம் போதாதெனில் பாரளுமன்றத்தை ஆறுமாதம் கழித்தே கலைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தொகுதிவாரி முறையுடன் விகிதாசார முறையும் கலந்த புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படின் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படல் வேண்டும், 2003 ஆண்டு ஆகஸ்டு மாதம் 20 திகதி அமைக்கப்பட்ட அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான தெரிவுக்குழு 2004 ஆம் ஆண்டு சமர்பித்த இடைக்கால அறிக்கையில் மற்றும் 2007 ஆம் ஆண்டு சமர்பித்த அறிக்கையிலும் சில பரிந்துரைகளை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் தொகுதிகளின் எல்லைகள் மீள் நிர்ணயம் இடம் பெரும் பொழுது அதற்கேற்ப மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச சபைகள் என பல்வேறு ஆட்சி நிர்வாக கட்டமைப்புக்களிலும் மாற்றங்கள் வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி தினேஷ் குணவர்த்தன தெரிவுக் குழுவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருந்த பொழுதும் இதுவரை முஸ்லிம் காங்கிரசோ அல்லது வேறு எந்த முஸ்லிம் அரசியல்கட்சியோ இது தொடர்பான ஆய்வறிக்கைகளை இதுவரை தயாரிக்க வில்லை என்பதுவும் கவலைக்குரிய விடயமாகும்.
அவ்வாறு பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நீடிக்கப்ப்படுமாயின் தேர்தலுக்கு முன்னரே அமைச்சரவை மாற்றத்துடன் தேசிய அரசு அமையும் சாத்தியப்பாடு உள்ளது. இன்ஷா அல்லாஹ்.
Published by

Leave a comment