திருவானந்தபுரம்: 2024ம் ஆண்டு செவ்வாய்க்கு ஒருமுறை பயணம் செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட 100 பேர் கொண்ட பட்டியலில் இந்திய பெண் ஒருவரும் இடம்பெற்றுள்ளார். கேரளாவைச் சேர்ந்த 19 வயதாகும் ஸ்ரதா பிரசாத் என்ற பெண், கோவை அமிர்தா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினயரிங் படித்து வருகிறார்.
நெதர்லாந்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று செவ்வாயில் மனித கொலனியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக உலகம் முழுவதிலும் உள்ள 100 பேரை தேர்வு செய்து செவ்வாய்க்கு அனுப்புவதற்கான முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
செவ்வாய் கிரகத்திற்கு பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என இந்நிறுவனம் அறிவித்திருந்தது. ஏறக்குறைய 2.5 இலட்சம் பேர் செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்காக விண்ணப்பித்தனர். இவர்களில் 100 பேரை மட்டும் அந்நிறுவனம் தேர்வு செய்துள்ளது. 50 பெண்கள், 50 ஆண்கள் கொண்ட இந்த பட்டியலில் 39 பேர் அமெரிக்கர்கள்.
31 ஐரேப்பியர்கள், 16 ஆசியர்கள், 7 ஆப்பிரிக்கர்கள், 7 ஓசனியாவைச் சேர்ந்தவர்கள். செவ்வாய் கிரகத்திற்கு செல்பவர்கள் பட்டியலில் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரதா பிரசாத் என்ற 19 வயது பெண்ணும் இடம் பெற்றுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் கோவை அமிர்தா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினயரிங் படிக்கிறேன்.
செவ்வாய்க்கு செல்வதற்காக விண்ணப்பித்த 2.5 இலட்சத்திற்கு அதிகமானவர்களில் நான் தேர்வு செய்யப்பட்டுள்ளது எனக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. நான் தேர்வு செய்யப்பட்டதை அறிந்ததில் இருந்து என் நண்பர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். இது போன்ற ரிஸ்க்கான செயல்களில் ஈடுபடுவது குறித்து முதலில் என் பெற்றோர் பயந்தனர். ஆனால் இதன் நடைமுறைகள் பற்றி தெரிந்ததால் இப்போது சந்தோசப்படுகிறார்கள்.
தொடர்ந்து 3வது மற்றும் 4வது சுற்று நேர்முக தேர்வுகளிலும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இறுதி பட்டியலிலும் இடம்பெறுவேன் என நம்புகிறேன். செவ்வாய்க்கு சென்று அங்கு குடியேறவும் திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரதா பிரசாத், 2013ம் ஆண்டு 7ம் மாதம் செவ்வாய்க்கு செல்வதற்காக விண்ணப்பித்துள்ளார். பின்னர் நடைபெற்ற ‘ஒன்லைன்’ தேர்வு, பெர்சனாலிட்டி மற்றும் மெடிக்கல் சோதனைகளிலும் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார். அடுத்த படியாக 4வது மற்றும் 5வது சுற்று தேர்வுகள் நடைபெற்று தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பின்னர் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
Published by


Leave a comment