சமுர்த்தி ஊழியர்களின் சேமலாபநிதி மீள வழங்கப்படும்

samurdhi[1]கொழும்பு: சமுர்த்தி மற்றும் ‘திவிநெகும’ துறைகளில் பணிபுரியும் 8368 அதிகாரிகளுக்கு கடந்த அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டிருந்த ஊழியர் சேமலாப நிதியை மீள பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளை தேர்தல் நடவடிக்கைகளுக்கும் ஆடம்பர நிகழ்வுகளுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சு கோடிக்கணக்கில் செலவிட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அதிகாரிகளுக்குரியதை அவர்களுக்கு மீளப் பெற்றுக் கொடுப்பது தமது பொறுப்பு என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிணங்க எதிர்வரும் 28ம் திகதி அவர்களை கொழும்புக்கு அழைத்து அவர்களுக்கான கொடுப்பனவை வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சில் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் இங்கு மேலும் விளக்கமளிக்கையில், திவிநெகும துறையில் வறுமை ஒழிப்பு நடவடிக்கை களில் 25,000 அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்துள்ளனர். எமது நாட்டில் சமுர்த்தி உதவி பெறும் 14 இலட்சம் குடும்பங்கள் உள்ளன. அதே போன்று ‘திவிநெகும’ துறையிலும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் பல்வேறு வகையில் நிவாரணங்களுக்கு உருத்துடையவர்கள்.

இத்தகைய 28 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளில் இந்த 25,000 அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். இவர் களுக்கான ஊழியர் சேமலாப நிதியத்தை கடந்த அரசாங்கம் நிறுத்தி வைத்திருந்தது. அந்த நிதியை நாம் அவர்களுக்கு மீள பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சமுர்த்தி அதிகாரிகள் ‘திவிநெகும’ அதிகாரிகள் மற்றும் அது சம்பந்தப்பட்ட மக்களின் உரிமைகளை முழுமையாகப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.

இந்த அதிகாரிகளின் ஊழியர் சேமலாப நிதியை இல்லாதொழிக்க கடந்த அரசாங்கம் எடுத்து வந்துள்ள முயற்சிக்கு நாம் முற்றுப் புள்ளி வைத்துள்ளோம். அவர்களுக்குச் சேர வேண்டிய பணம் 70,000 இலட்சம் ரூபாவை மீள அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளோம்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ‘திவிநெகும’ மாநாட்டை நடத்தவென அப்பாவி சமுர்த்தி உதவி பெறுவோரின் பணம் 630 இலட்சம் ரூபா சூறையாடப்பட்டுள்ளது. ஒரு நாளில் நடத்தப்படும் மாநாட்டிற்காக இந்தளவு பணம் செலவிடப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி ஜனாதிபதித் தேர்தலின் போது பிரசார பதிப்பு நடவடிக்கைகளுக்காக 50 இலட்சம் ரூபா இந்த அப்பாவி மக்களின் பணத்திலிருந்தே கடந்த அரசாங்கம் செலவிட்டுள்ளது.

இவ்வாறு அப்பாவி மக்களின் பணத்தை அபகரிப்பது, திருடுவது எமது அரசாங்கத்தினால் நிறுத்தப் பட்டுள்ளது. குறிப்பாக சமுர்த்தி உதவி பெறுவோர் மற்றும் அதிகாரிகளுக்கு உரித்தானவை அவர்களுக்கு முறையாக பெற்றுக் கொடுக்கப்படும். மேலும் ‘திவிநெகும’ துறையில் 14,000 அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மற்றுமொரு பிரச்சினை உள்ளது. அது பற்றியும் நாம் தற்போது கலந்துரையாடி வருகின்றோம். அந்த பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும். அவர்களது வேண்டுகோளை முழுமையாக நிறைவேற்ற நாம் நடவடிக்கை எடுப்போம்.

Published by

Leave a comment