வந்தாறுமூலை: கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு – வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக இன்று 18.02.2015 பிற்பகல் இருவேறு தரப்பினர் ஏட்டிக்குப் போட்டியாக கறுப்புப் பட்டி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிப்பதற்காக ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தைக் கோரி ஒரு குழுவினர் துண்டுப்பிரசுரம் விநியோகித்தனர்.
இதேவேளை பல்கலைக் கழகத்தில் ஊழல் மற்றும் மோசடிகள் இடம் பெறுவதாகக்கூறி ஒரு சிலர் பல்கலைக் கழகத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதையும் , இதற்காக பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதையும் கண்டித்து ஊழியர்கள் சங்கம் கையில் கறுப்புப் பட்டியணிந்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது. அத்துடன் தமது கண்டனத்தைக் குறிப்பிட்டு துண்டுப்பிரசுரங்களும் வெளியிடப்பட்டன.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அதிகபட்சமாக 350 பேருக்கு மேற்பட்டவர்கள் ஊழியர் சங்கத்தில் இருக்கும்போது எவ்வித அறிவிப்புமின்றி ‘பல்கலைக்கழக சமூகம்’ என்ற பெயரில் மாணவர்களையும் ஒருசில பொது மக்களையும் இணைத்து எதிர்ப்புப் போராட்டங்களை நடாத்துவது கண்டிக்கத்தக்கதென ஊழியர் சங்கப்பிரதிநிதிகள் தெரிவித்தனர். தமது கண்டனத்தை வலியுறுத்தும் பதாதைகளையும் இவர்கள் ஏந்தி நின்றனர்.
Published by



Leave a comment