குடும்பச் சட்டம் தெரிந்திருந்தால், குழப்பம் வரும் போது விளக்கம் கொடுக்கலாம்: மனித உரிமைகள் ஆணைக்குழு இணைப்பாளர் அப்துல் அஸீஸ்

unnamedஅப்துல்  அஸீஸ் / பழுலுல்லாஹ் பர்ஹான்

ஏறாவூர்: எமது நாட்டில் குடும்ப உறவுகள் பல்வேறு சட்டங்களினால் ஆளப்படுகின்றன. இலங்கையில் முஸ்லிம் சட்டமானது பெரும்பாலும் பன்மைத்துவ சமூக கட்டமைப்பில் வரலாற்றுக் காரணிகளின் பின்னணியில் தெரிவு செய்யப்பட்ட இஸ்லாமிய சட்டவியல் அம்சங்கள் சிறிய மாற்றங்களுடன் பின்பற்றப்படுகின்ற தனியார் சட்டப்பரப்பாகும். இச்சட்டத்தினை தெரிந்திருந்தால் குடும்பத்தில் குழப்பம் வரும் போது விளக்கம் கொடுக்கலாம் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல்  அஸீஸ் தெரிவித்தார்.

ஏறாவூர் சமூக அபிவிருத்தி மன்றத்தினால் தமிழ், முஸ்லிம் சமுகங்களைச் சேர்ந்த திருமணத் தம்பதிகளுக்கான  ‘முஸ்லிம் சட்டமும், பொதுச் சட்டமும்’ எனும் தொனிப் பொருளிலான செயலமர்வு ஏறாவூர் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் (14.02.2015) நிறுவனத்தின் இணைப்பாளர் ஜனாப். எஸ்.ஏ.சி. நஜிமுதீன் தலைமையில் நிகழ்ந்த போது, அஸீஸ் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,  

இலங்கை முஸ்லிம்களின் குடும்பச் சட்டம் படிப்படியாக பொதுச் சட்டத்தின் செல்வாக்கைவிட, இஸ்லாமிய சட்ட விதிகளின் செல்வாக்கிற்கு உட்பட்டு வருகிறது. ஆயினும் எம் நாட்டில் அதிகமானவர்கள் பொதுச் சட்டத்தினாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலங்கைப் பிரஜைகள் தனியார் சட்டங்களினாலும், ஆளப்படுகின்றனர். குடும்பம் என்பது இஸ்லாமிய சமூக அமைப்பின் அடிப்படையாகும். கணவன் மனைவிக்கிடையி;ல் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

நவீன உலகில் வாழும் மனிதன் பல புதிய பிரச்சினைகளை எதிர்நோக்குகிறான். அந்தப் பிரச்சினைகளுக்கு அவனுக்கு இஸ்லாமியத் தீர்வு கொடுக்கப்படும் போதுதான் இஸ்லாமிய வரையறையினுள் அவனை வாழ வைக்க முடியும். ஆண், பெண் இருவருக்கும் தம் வாழ்க்கைத் துணையை நிலையான அடிப்படைகளின் மீது கவனமாக தெரிவு செய்யுமாறு இஸ்லாமிய சமயம் விரும்புகிறது.

ஒரு ஆண் தனக்குரிய துணையாக ஒரு பெண்ணை நான்கு காரணங்களுக்காக திருமணம் முடிக்க அனுமதியுண்டு. அவளின் செல்வம், அழகு, குடும்பம், மார்க்க உணர்வு இதனைத கவனத்திற் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. இருப்பினும் இஸ்லாமியக் சட்டக் கண்ணோட்டத்தில் திருமணம் என்பது நிபந்தனைக்குட்படாத பரஸ்பர திருப்தியில் உருவாகும் ஒப்பந்தமாகும். இத்திருப்தியானது உள்ளத்தோடு சார்ந்த செயலாகும்.

உளத்திருப்தியைக் காட்ட வாய்மொழியே சாதனமாகும். இதனால்தான் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபாடு இரு பிரிவினரும் தங்கள் திருப்தியை சொற்களின் மூலம் வெளியிடுவர். இஸ்லாமியத் திருமணம் நிறைவேறுவதற்கு மணமகன், மணமகளின் வலி மற்றும் திருமண சடங்கை நடத்துபவர் கட்டாயம் அவசியம்.

ஒரு பெண்ணைத் திருமணம் முடித்துக் கொடுக்கும் போது அவளுக்கு கணவனாக வருபவனோடு அவள் விருப்பத்துடன் இருக்கிறாளா எனப்பார்ப்பதை இஸ்லாம் கடமையாக்குகிறது. அவளது விருப்பத்திற்கு முரணாக திருமணம் செய்து கொடுப்பதை இஸ்லாம் தடை செய்கிறது. அவ்வாறு செய்தால் அத்திருமணத்தை ரத்துச் செய்து கொள்ளும் உரிமையும் அவளுக்கு வழங்குகிறது.

காழி நீதிமன்றம் மூலம் இதனை அவள் செய்து கொள்ளலாம். ஆனால் முற்று முழுதாக திருமணத்தை நடாத்தும் பொறுப்பை பெண்ணின் கையிலேயே இஸ்லாம் விட்டு விடவில்லை. இன்னொரு பக்கத்தால் அவளை கட்டுப்படுத்தவும் செய்கிறது. இப்படி திருமண ஒப்பந்தத்தில் முழுச் சுதந்திரத்தையும் கொடுத்து விடாமலும், அதே வேளை அவளுக்கு அநியாயம் நடக்காதிருக்க கணவனை தெரிவு செய்யும் உரிமையையும் வழங்கியிருப்பதை பெண்ணின் இயல்பை கவனத்திற் கொள்ளும் சிறந்ததொரு ஒழுங்காகவே நாம் கருத முடியும் என அஸீஸ் மேற்கண்டாறு தெரிவித்தார்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment