பேருவளை: மொஸாம்பிக் நாட்டுக்கு மாணிக் கக்கல் வர்த்தக நடவடிக்கைகளுக்காக சென்ற பேருவளை சீனன்கோட்டையைச் சேர்ந்த இரு வர்த்தகர்களும் (10ம் திகதி) அந்நாட்டு மொண்டபேஸ் என்ற பகுதியில் மரணமாகியுள்ளனர். பேருவளை சீனன்கோட்டையைச் சேர்ந்த எம்.டபிள்யு.எம். இஸாப் (வயது 53), எம். ஸஸ்னி நவாஸ் (வயது 28) ஆகிய இருவருமே இவ்வாறு மரணமாகியுள்ளனர்.
இலங்கையிலிருந்து கடந்த மூன்று தினங்களுக்கு முன் மூவரங்கிய வர்த்தகர்கள் மொஸம்பிக் நாட்டுக்குச் சென்று வாடகை வீட்டில் தங்கியுள்ளதாகவும் இப்பகுதியில் மின்சார விநியோகம் ஒருமாத காலமாக தடைப்பட் டுள்ளதால் ஜெனரேட்டர் பாவத்து மின் வசதியை இவர்கள் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகிறது.
வீட்டில் படுத்துறங்கியுள்ள நிலையிலேயே இருவரும் மரணமாகியுள்ளதாகவும், அஷ்கர் மர்ஸூக் என்பவர் மயக்கமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் தெரிய வருகிறது. பல மணித்தியாலங்கள் இயங்கிய ஜெனரேட்டரின் புகை தாக்கத்தினால் இவர்கள் இருவரும் மூச்சுத் திணறி மரணமாகி இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மரணமான இரு வர்த்தகர்களினதும் ஜனாஸாக்களைப் பொறுப்பேற்று அங்கேயே நல்லடக்கம் செய்வதற்காக இரு குடும்பங்களையும் சேர்ந்த உறவினர்கள் 10ம் திகதி இரவு மொஸம்பிக் நாட்டை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த இரு இரத்தினக்கல் வர்த்தகர்களின் மறைவையொட்டி சீனன்கோட்டைப் பிரதேசம் ஆழ்ந்த சோகத்தில் மூழ்க்கியுள்ளது.
Published by


Leave a comment