கொழும்பு: எழுபத்தேழு இலட்ச ரூபாய் பெறுமதியான பவுண், யூரோ மற்றும் ஜப்பானிய யென் ஆகியவற்றுடன் சிங்கப்பூர் செல்வதற்காக வந்திருந்த தொலைபேசி உதிரிப்பாக வர்த்தகரொருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
சந்தேக நபர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயது வர்த்தகராவார்.
கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு பண நோட்டுக்களில் 22,500 யூரோவும் 15,000 ஸ்ரேலிங் பவுண்களும் 1,000,000 ஜப்பானிய யென்னும் இருந்தன.
இன்று காலை சந்தேக நபர் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் செந்தமான யூ.எல் 306 விமானத்தில் சிங்கப்பூர் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்த வேளையில் அவரது பயணப் பையினை சோதனையிட்டபோதே இப் பண நோட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இவை பத்துப் பொதிகளில் கட்டப்பட்டு காபன் கடதாசியில் சுற்றப்பட்டிருந்ததாகவும் சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் விமான நிலைய சுங்கப் பணிப்பாளர் ரோஷினி பீரிஸ் அவர்களின் மேற்பார்வையின் கீழ் பிரதி சுங்கப் பணிப்பாளர் ஸ்ரேன்லி சேனாரத்ன அவர்களின் நடவடிக்கையின் பேரில் பிரதி சுங்க அத்தியட்சகர் எம்.கே.உதய காமினி மற்றும் உதவி சுங்க பணிப்பாளர் நுவான் அபேநாயக்க ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Published by

Leave a comment