சிகரம்: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான சிகரம் கிராமத்தில் ஸ்ரீ லங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தினால் வசதி குறைந்த 50 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 08-03-2015 நேற்று ஞாயிற்றுக்கிழமை சிகரம் கிராமத்தில் இடம்பெற்றது.
சிகரம் ஜூம்மா பள்ளிவாயல் தலைவர் எம். வை. ஆதம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
இதன் போது ஸ்ரீ லங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அதிதிகளினால் வசதி குறைந்த குடும்பங்களுக்கு 50 வீடு கட்டுவதற்கான அடிக்கல் நடப்பட்டது.
இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் (மதனி), காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் சுபைர் உட்பட அதன் பிரதிநிதிகள், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், ஸ்ரீ லங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் சிகரம் வீட்டுத்திட்ட மேற்பார்வையாளர் நௌசாட் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு குறித்த வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட வசதி குறைந்த 50 குடும்பங்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
6 மாத காலம் தற்காலிகமாக கட்டிக்கொடுக்கப்பட்ட தகறக்கொட்டில்களில் 11 வருட காலமாக வாழ்ந்துவரும் குறித்த சிகரம் கிராம மக்களுக்கு ஸ்ரீ லங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தினால் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான 50 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment