மண்முனை: கடந்த பத்து வருடங்களாக மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் இயங்கிவரும் இலக்கம் 298 மண்முனைப்பற்று மத்தியஸ்த சபையின் 2014ம் ஆண்டு வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு 07-02-2015 இன்று சனிக்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மண்முனைப்பற்று மத்தியஸ்த சபையின் தவிசாளர் க.ஜெயசுந்தரம் தலைமையில் இடம்பெற்ற இவ் ஒன்று கூடல் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் கலந்து கொண்டார்.
இதன் போது இம் மத்தியஸ்த சபையின் முன்னேற்றம் குறித்தும், இப் பிரதேச சமூகத்தினுடாக பிணக்குகளை இணக்கத்திற்கு அல்லது சமாதான சகஜ நிலைக்கு கொண்டு வருவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இவ் ஒன்று கூடல் நிகழ்வில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திருமதி சுரேந்திரன், ஆரையம்பதி தபால் நிலையத்தின் தபாலதிபர் திருமதி யோகேஸ்வரி லோகேஸ்வரராஜா, காத்தான்குடி மத்தியஸ்த சபையின் தவிசாளர் எம்.ஐ.எம். உஸனார், காத்தான்குடி பொலிஸ் நிலைய அதிகாரி ஜெயசீலன், சிகரம் ஜூம்மா பள்ளிவாயல் தலைவரும், மண்முனைப்பற்று மத்தியஸ்த சபை உறுப்பினருமான எம்.வை. ஆதம் உட்பட மண்முனைப்பற்று மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி மண்முனைப்பற்று மத்தியஸ்த சபையில் கடந்த 2014 ஆண்டு 450 பிணக்குகள் முழுமையாக கிடைத்ததாகவும் இதில் நீதிமன்றத்தில் மூலம் 15 பிணக்குகளும், பொலிஸ் மூலம் 173 பிணக்குகளும், வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் 79 பிணக்குகளும், ஏற்கனவே தீர்வு கண்டவற்றை மீறிவந்த 20 பிணக்குகளும், பிணக்குக்காரர்களிடமிருந்து நேரடியாக கிடைத்த 163 பிணக்குகளும் கிடைத்ததாகவும் இவற்றில் சிறுகாயம், பெருங்காயம் விளைவித்த 20 பிணக்குகளும், முறைகேடான சொத்துப் பரிமாற்றம் மூலம் 19 பிணக்குகளும்,குற்றமுறையான அச்சுறுத்தல் மூலம் 56 பிணக்குகளும், குடும்பப் பிணக்குகள் 20வதும், காணித் தகராறுகள் 18ம், நிதிப் பிணக்குகள் 296ம் கிடைக்கப்பெற்றன.
இவற்றில் தீர்வு காணப்பட்டவை அல்லது இணக்கப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டவை 275 பிணக்குகளும் தீர்வு காணப்படாதவை 84ம், நிராகரித்தவை அல்லது வாபஸ் பெறப்பட்டவை 103ம் என மண்முனைப்பற்று மத்தியஸ்த சபையின் தவிசாளர் க.ஜெயசுந்தரம் தெரிவித்தார்.
Published by

Leave a comment