கொழும்பு: சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி, கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலை கட்சியின் உறுப்புரிமைகளிலிருந்தும் அவர் கட்சியில் வகித்த சகல பதவிகளிலிருந்தும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸனலி தெரிவித்துள்ளார்.
கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியமை மற்றும் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியமை ஆகிய காரணங்களுக்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், தலைவர் அமைச்சர் ஹக்கீமினால் அவர்; வகித்து வந்த அதிஉயர் பீட உறுப்பினர், இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் உட்பட கட்சியின் சகல பதவிகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதற்கான கடிதம் தம்மால் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் செயலாளர் நாயகம் ஹஸனலி மேலும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சராக ஹாபிஸ் நஸீர் அஹமத்தை நியமிக்கவுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார். அதனை ஏற்றுக் கொள்வதாக ஏ.எம்.ஜெமீல் தவிர்ந்த கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏனைய ஆறு பேரும் சத்தியக்கடதாசி மூலம் தெரிவித்துள்ளனர்.
Published by

Leave a comment