போர் முடிந்ததால் மட்டும் தேச ஒற்றுமை ஏற்படவில்லை: ஜனாதிபதி மைத்திரிபால

10980732_10153003616071327_2355003119778147263_nகொழும்பு: இலங்கையில் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த போதிலும் அதன் முலம் வடக்கு மற்றும் தென் பகுதிகளில் வாழும் மக்களின் இதயங்களை ஒன்று சேர்க்க முடியவில்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலங்கையின் 67 வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை ஸ்ரீ ஜெயவர்த்தனபுற கோட்டே நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றன.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, 2009 ம் ஆண்டு அரச பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளைத் தோற்கடித்து அமைதியை ஏற்படுத்திய போதிலும் வடக்கு மற்றும் தென் பகுதி மக்களின் உள்ளங்கள் ஒன்றுபடவில்லை என்று கூறினார்.

இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமென்று கூறிய ஜனாதிபதி சிறிசேன இது தற்போது நாம் எதிர்நோக்கும் பாரிய சவாலென்று கூறினார்.

இலங்கை மக்களிடையே நட்புறவை மேம்படுத்தி தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டிஎழுப்பவேண்டிய அவசர அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

மேலும் கருத்துக்களை தெரிவித்த ஜனாதிபதி சிறிசேன தற்போது வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

உள்ளோருக்கும் இல்லோதோருக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர் இதன் காரணமாக சுதந்திரத்தின் முழுப் பலனை அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன் காரணமாக சமூகங்களுக்கிடையே ஒற்றுமை சீர் குலைந்து பிரிவினை, சந்தேகங்கள் மற்றும் பேதங்கள் ஏற்பட்டுள்ளன என்றார். எனவே ஒருவருக்கு ஒருவர் குற்றச் சாட்டுக்களை சுமத்துவதை தவிர்த்து மனிதாபிமானத்துடன் ஒற்றுமையாக செயற்படுவது அவசியமென்றும் கூறினார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

கடந்த காலத்தில் இடம்பெற்ற குறைபாடுகள் மற்றும் தவறுகளை இனம் கண்டு புரிந்து கொள்ள வேண்டும், அரசியல் பொருளாதார சமுக, கலாசார துறைகளில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டுமென்று கூறிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சுதந்திரத்தின் முழுமையான பலனை அப்போதுதான் அடைய முடியுமென்றும் கூறினார்.

மேலும் கருத்துக்களை தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த ஜனாதிபதி தேர்தலின் பொது வழங்கிய பல வாக்குறுதிகளை தனது அரசாங்கம் தற்போது நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார்.

அணிசேரா கொள்கை மற்றும் ஐக்கிய நாடுகளின் சாசனத்திற்கு மதிப்பளித்து சர்வதேச உறவுகளை பலப்படுத்த தனது அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதன் முலம் பல நன்மைகளை பெற முடியுமென்றும் தெரிவித்தார்.

எனவே நாட்டின் முன்னேற்றத்திற்காக சகல இன மக்களும் சமாதானம் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துடன் செயற்பட வேண்டுமென்றும் கூறினார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

சுதந்திர தின நிகழ்வுகளின் இறுதியில் முப்படைகளின் மரியாதை அணிவகுப்பொன்றும் நடைபெற்றது.

இலங்கையின் சுதந்திர தினம் தேசிய வைபவத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை முதற்தடவையாக கலந்து கொண்டுள்ளது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment