“பணயக்கைதியைக் கொன்றாலும் இஸ்லாமிய அரசு எதிர்ப்பு தொடரும்”: ஜப்பான்
டோக்யோ: இஸ்லாமிய அரசு தீவிரவாதக்குழுவிடம் பிடிபட்டிருந்த இரண்டாவ்து ஜப்பானிய பணயக்கைதியான கெஞ்சி கொடோவின் படுகொலையை ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே கடுமையான கண்டித்திருக்கிறார். அக்டோபர் மாதம் கடத்திச் செல்லப்பட்ட ஜப்பானிய ஊடகவியலாளர் கெஞ்சி கோடோ தலை வெட்டிக்கொலை செய்யப்படும் காட்சி இணையத்தில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து
இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பானிய பிரதமர் அந்த கொலைகாரர்களை நீதியின் முன் கொண்டுவந்து நிறுத்துவதற்கு தேவையான அனைத்தையும் ஜப்பான் செய்யும் என்று அறிவித்திருக்கிறார்.
மேலும் இஸ்லாமிய அரசு அமைப்புக்கு எதிரான சர்வதேச கூட்டணியுடன் ஜப்பான் தொடர்ந்தும் இணைந்து செயற்படும் என்றும் ஜப்பானிய பிரதமர் வலியுறுத்தியிருக்கிறார். கோடோவை இழந்து வாடும் அவரது தயார் ஜங்கோ இஷிடோ தனது இழப்பின் அளவை விவரிக்க தன்னிடம் வார்த்தைகள் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
கொல்லப்பட்ட ஊடகவியலாளரின் தாயார் தனது மகனை இழந்த சோகத்தில்…
ஏற்கெனவே இஸ்லாமிய அரசு அமைப்பு வேறொரு ஜப்பானிய பணயக்கைதியை தாங்கள் கொன்றுவிட்டதாக ஒரு வாரத்துக்கு முன்பு அறிவித்திருந்தது. இஸ்லாமிய அரசு அமைப்புக்கு எதிராக போராடிவரும் நாடுகளுக்கு இராணுவம் சாராத உதவியாக இருபது கோடி டாலர்களை அளிப்பதாக ஜப்பான் அறிவித்திருந்தது.
அந்த நிதியை தங்களிடம் கொடுத்தால் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் ஜப்பானிய பணயக்கைதியை விடுவிப்போம் என்று இஸ்லாமிய அரசு தீவிரவாத அமைப்பு தெரிவித்திருந்தது. அந்த கோரிக்கை ஜப்பானிய அரசால் ஏற்கப்படாத நிலையில் அந்த பணயக்கைதியை கொன்று விட்டதாக இஸ்லாமிய அரசு அமைப்பு அப்போது அறிவித்திருந்தது.
Leave a comment