கொழும்பு: கசினோ தொடர்பாக விசேட தீர்மானமொன்றை அமைச்சரவை எடுத்துள்ளது. இதற்கமைய மூலோபாய அபிவிருத்தி செயற்றிட்ட சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை திருத்தியமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் நேற்று விசேட உரையொன்றை ஆற்றியி ருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக லேக் லெஷர் தனியார் கம்பனி, வோடர் புரொன்ட் தனியார் கம்பனி, த குயின்ஸ்பரி லெசர் கம்பனி போன்ற நிறுவனங்களுக்கு கசினோ மற்றும் சூது நடத்துவதற்கு அதற்காக ஏனைய நிறுவனங்களுக்கு வாடகைக்கு இட வசதிகளை வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சிறந்த நிதிச் செயற்பாட்டுடன் கூடிய பொது மக்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறையொன்றை தோற்றுவிப்பதே எமது பொறுப்பாகும். அதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் அர்ப் பணிப்புகளை மேற்கொள்கின்றனர். அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் அதேபோன்றதொரு அர்ப்பணிப்பினை மேற்கொள்வதாகவும் பிரதமர் கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நூறுநாள் செயற்றிட்டமானது எம்முன்னால் காணப்படும் பாரிய ஒரு சவாலாகும். அச்செயற்றிட்டத்தை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். அந்த சவாலை வெற்றிகொள்வதற்கு நாம் இரவு பகல் பாராது உழைக்கின்றோம்.
சிலர் நூறுநாள் செயற்றிட்டத்தை குறைகூறுகின்றனர். நியாயமான குறைகளுக்கு நாம் மதிப்பளிக்கின்றோம். நூறுநாள் செயற்றிட்டத்தை வளமடையச் செய்யும் உங்கள் கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்வோம். ஒரு நாள் இரண்டுநாள் பிந்துவதாக சிலர் கூறுகின்றனர். குடும்ப ஆட்சியையும், ஏகாதிபத்திய ஆட்சியையும் முழுமையாக அழித்து மக்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட இறைமையை மீண்டும் மக்களுக்கு வழங்கும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளோம்.
ஜனநாயகத்தை உறுதி செய்து பொது மக்களின் வாழ்க்கைக்கு நிவாரணம் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குவோம் என்பது நாம் தொடர்ச்சியாகக் கூறிவரும் விடயம் இதனை நிறைவேற்றுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சர் டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் விலைகளைக் குறைத்துள்ளார். மேலும் உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் பஸ் கட்டணங்களையும் குறைத்துள்ளார். தடைசெய்யப்பட்ட ஐரோப்பாவிற்கான மீன்ஏற்றுமதி அனுமதி மற்றும் ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகை என்பவற்றை மீளப்பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தனிநபரை மையப்படுத்தி காணப்படும் அதிகாரங்களைக் கொண்ட நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறைக்குப் பதிலாக அமைச்சரவை மற்றும் பாராளுமன்றிற்கு அதிகாரம் கிடைக்கும் புதிய அரசியலமைப்பு முறையொன்றை அமைப்பதற்கான செயற்பாடுகளை நாம் ஆரம்பித்துள்ளோம். யாப்பு நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை தற்போதைக்கு நாம் நியமித்துள்ளோம்.
அவர்கள் தயாரிக்கும் அபிப்பிராய எழுத்தாவணத்தை மிக விரைவில் கட்சித் தலைவர்களிடம் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியதன் பின்னரே அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்போம். புதிய தேர்தல் முறையொன்றை அடிப்படையாகக் கொண்ட எழுத்தாவணத்தையும் நாம் கட்சித் தலைவர்களிடம் சமர்ப்பிக்கவுள்ளோம் என்றார்.
Published by

Leave a comment