சம்மாந்துறை: சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி – 01 இஸ்மாயில்புரம் சுனாமி வீட்டுத் திட்டப் பிரதேசத்தில் நேற்று (30) நள்ளிரவு குடிசை ஒன்று தீப்பற்றியதில் தந்தையும் மகனும் உயிரிழந்தனர். மகள் எரிகாயங்களுடன் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில், சின்னத்தம்பி ஆதம்லெப்பை (வயது 43), மகன் ஆதம்லெப்பை றிஸான் (வயது 02) ஆகியோர் குடிசையினுள்ளே மரணமடைந்துள்ளனர். மகளான ஆதம்லெப்பை றியா (5 வயது) என்பவர் தீக்காயங்களுடன் அம்பாறை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது ஒரு திட்டமிட்ட செயல் என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் மரணமடைந்தவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இப்பிரதேசத்தில் இடம்பெற்ற குற்றச் சம்பவம் ஒன்றிற்காக எதிர்வரும் மாதத்தில் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள வழக்கொன்றில் சாட்சியாக உள்ளார் எனவும் அப்பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
இச் சம்பவத்துடன் தொடர்பாக அப்பிரதேசத்தில் பல குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய நியாஸ் (வயது 45) என்பவர் சம்மாந்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
– தினகரன்
Published by
![fire[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/fire1.jpg?w=141&h=150)
Leave a comment