கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவுசெலவுத்திட்டம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பித்து அமைச்சர் விசேட உரையாற்றவிருப்பதாக நிதி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது. ஆரம்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்து உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரை நிகழ்த்துவார். பிற்பகல் 1.15 மணிமுதல் 3 மணிவரை வரவுசெலவுத்திட்டம் மீதான உரை இடம்பெறும். .
அரச உத்தியோகத்தர்களின் சம்பள உயர்வு மற்றும் குறைந்தது 10 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்புடன் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இந்த இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களுக்கான நிவாரணப் பொதிகள், தனியார் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்கள் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்று இந்த வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பல்வேறு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டாலும் மறுபக்கத்தில் மக்கள் வரிகள் அதிகரிக்கப்பட்டு மக்கள் மீது சுமை ஏற்படமாட்டாது என அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.
அரசாங்க ஊழியர்களின் சம்பளம் 5000 ரூபாவால் அதிகரிக்கப்படுவதுடன், தனியார் ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிப்பதற்கு ஏதுவாக முதலீட்டாளர்களுக்கும் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இந்த இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக வழிவகை செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2013ஆம் ஆண்டில் எமது நாட்டில் வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை சுமார் நூற்றுக்கு 5.6 வீதமாகவே காணப்பட்டது, இந்தத் தொகை 2014ஆம் ஆண்டு நூற்றுக்கு 4.9 வீதமாக குறைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாகவும் அந்த இலக்கையே தக்கவைத்துக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
37 அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்காக வரி அறிவிடப்பட்டு வந்த நெத்தலிக்கருவாடு, கிழங்கு, சின்னவெங்காயம், பெரியவெங்காயம், வெள்ளைப்பூடு, பயறு, பருப்பு, மிளகாய்த்தூள், ரின்மீன், சீனி, அரிசி, சோளம், யோகட், பட்டர், கொடி முந்திரிகைப்பழம், தோடம்பழம், உழுந்து, கெளப்பி உள்ளிட்ட பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடையும் என்று சந்தையில் இப்போதே இதற்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கடந்த அரசாங்கத்தால் எவ்வாறு ஏமாற்றப்பட்டார்கள் என்பதை இன்றையதினம் சமர்ப்பிக்கப்படவிருக்கும் வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக மக்கள் புரிந்துகொள்வார்கள் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகள் எவ்வாறு தம்மீது சுமத்தப்பட்டிருந்தது என்பதை மக்கள் உணர்ந்துகொள்வார்கள். அரசாங்கத்தின் உண்மையான கடன் எவ்வளவு என்பது வெளியாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இன்று இடைக்கால வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் அதேநேரம், நாளை முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 6.30 மணிவரை இடைக்கால வரவு செலவு திட்டம் மீதான முழு நாள் விவாதம் நடைபெறவுள்ளது.
Published by

Leave a comment