“கல்வியில் முன்னேறுபவர்களை கௌரவித்து பரிசில்களை வழங்குவதை மாத்திரம் மேற்கொள்ளாது ஒழுக்க விழுமியங்களில் சிறப்பாகத்திகழும் மாணவர்களையும் அடையாளம் கண்டு கௌரவியுங்கள்”
– எம்.எச்.எம். அன்வர்
காத்தான்குடி: கல்வியில் முன்னேறுபவர்களை கௌரவித்து பரிசில்களை வழங்குவதை மாத்திரம் மேற்கொள்ளாது ஒழுக்க விழுமியங்களில் சிறப்பாகத்திகழும் மாணவர்களையும் அடையாளம் கண்டு கௌரவியுங்கள். இவ்வாறு காத்தான்குடி பிரதேச செயலக சர்வதேச சிறுவர் முதியோர் தின விழாவின்போது காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.எம். நஸீர் டீன் வேண்டுகோள் விடுத்தார்.
பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி எஸ் எம் சார்ள்ஸ் கலந்து கொண்டார்.
சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தனதுரையில்,
எமது சமூகத்தில் கல்வி நிலை ஓரளவு உயர்ந்து செல்கின்றபோதிலும் ஒழுக்கம் பண்பாடு மதிக்கும் தன்மை என்பன குறைந்து காணப்படுகிறது. இதற்கான முழுக்காரணமும் பெற்றோராகிய உங்களையே சாரும் நாம் சரியாக பிளளைகளை வளர்க்க கடமைப்பட்டுள்ளோம். பிள்ளைகளுக்கான சுதந்திரத்தினை அவர்களுக்கு வழங்கவேண்டும். பிள்ளைகளுக்கான கல்வியை மாத்திரம் அவதானம் செலுத்துகின்ற நாம் போசாக்கு நிலை சுகாதாரம் போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். சுத்தம் ஈமானின் பாதியாகும் எவ்வளவுதான் கல்வியில் முன்னேறினாலும் பிள்ளைகளுக்கு முறையான பின்னூட்டல் இல்லாவிட்டால் எந்த பிரயோசனமும் ஏற்படாது.
டெங்கு நோய் தொடர்பாகவும் அவர் கருத்து வெளியிட்டார்.
Dr. யூ.எல்.எம். நஸீர் டீன்
டெங்கு தற்போது எமது பகுதியில் அதிகரித்து காணப்படுகிறது. வீடுகளிலுள்ள கிணறுகள் கவனிப்பாரற்று கிடக்கின்றன. இதை யாரும் கவனிப்பதில்லை டெங்குக்கு மருந்து கிடையாது. அந்த நோயாளியலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியே அதற்கு மருந்தாகும். சிறிய வயது பிள்ளைக்கு மரணம் ஏற்பட்டால் அந்த இழப்பீட்டை யாராலும் ஈடு செய்ய முடியாது. அத்துடன் பாடசாலைச் சூழலையும் கவனத்தில் எடுக்கவும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நவம்பரில் 16 பேரும், டிஸம்பரில் 22 பேரும், ஜனவரியில் இதுவரைக்கும் 20 பேரும் இனம் காணப்படடுள்ளனர். மிகவும் கவனமாக இந்த டெங்கு விடயத்தில் இருந்து உயிர்களைக்காக்க கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார். .
Leave a comment