மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகர்கள், சர்வமதத் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களில் 172 வாகனங்கள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை

mahinda gotaகொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகர்கள், சர்வமதத் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களில் 172 வாகனங்கள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. அவற்றை விரைவில் ஒப்படைக்குமாறும் அவ்வாறு மீறும் பட்சத்தில் திடீர் முற்றுகையின் மூலம் கைப்பற்றப்படும் என என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட 752 வாகனங்களில் 580 வாகனங்கள் இதுவரை கையளிக்கப்பட்டுள்ளன. கையளிக்காக இன்னும் 172 வாகனங்களை உடனடியாக ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்குமாறும் அந்நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதி செயலகத்தில் இதுவரை 379 வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக 182 வாகனங்களும், 19 வாகனங்கள் பாதுகாப்பு உயர் அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன நேற்று தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதி செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் பல காணாமல் போயுள்ளதாகவும் அவற்றை பயன்படுத்துவோர் தொடர்பாக உடனடியாக தகவல் வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. இது தொடர்பான அறிக்கை நேற்று பொலிஸ்மா அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த 752 வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதியின் பாவனைக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தது. இவற்றில் நேற்று வரை 379 வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 182 வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்டி ருந்ததுடன் 19 வாகனங்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் இன்னும் 172 வாகனங்கள் மாத்திரமே ஜனாதிபதி செயலகத்துக்கு ஒப்படைக்க வேண்டும். ஏனைய அனைத்து வாகனங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒப்படைக்கப்படாத வாகனங்கள் உடனடியாக ஒப்படைக்குமாறும், அவ்விதம் செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு எதிராக திடீர் சுற்றிவளைப்புகள் மூலம் வாகனங்கள் கைப்பற்றப்படும்.

பொலிஸார் திடீர் சுற்றிவளைப்புகள் மூலம் வாகனங்களை கைப்பற்றினால் சம்பந்தப்படும் நபர்களுக்கு எவ்வித பிணையுமின்றி கைது செய்யப்படுவர்.

அவ்வாறே, இதுவரை பயன்படுத்தி வந்த வாகனங்கள் சட்டபூர்வமாக வழங்கப்பட்டுள்ளதா? அல்லது ஜனாதிபதி செயலக ஆவண ஏட்டில் பதிவு செய்யப்பட்டமைக்கு அமைவாக பயன்படுத்தப்பட்டதா? எங்கிருந்து இவற்றுக்கான எரிபொருள் பெற்றுக்கொள்ளப்பட்டது? டயர்கள் மாற்றுவது உட்பட ஏனைய பொருட்களை மாற்றியமை தொடர்பாக யாரிடம் அனுமதி கோரினர் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் விசாரணை செய்யப்படும் என்றார்.

Published by

Leave a comment