மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்துக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவையும் இல்லை
மத்தள: ஹம்பாந்தோட்டையில் மத்தளவில் உள்ள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கான விமான சேவைகளை முற்றாக நிறுத்தப்போவதாக நட்டத்தில் இயங்கிவரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷாவின் சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் மத்தள என்ற இடத்தில் கடந்த ஆட்சியின்போது திறக்கப்பட்டது.
இந்த விமான நிலையத்துக்காக விமானங்களை இயக்குவது பெரிய அளவு நட்டத்தை ஏற்படுத்துவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. “தெருக் கோடியில் உள்ள மளிகைக்கடை ஈட்டும் வருமானத்தைக் கூட இந்த விமான நிலையம் ஈட்டித் தரவில்லை” என்று நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட ஒரு அறிக்கையில் புதிய அரசாங்கம் கூறியுள்ளது.
இந்த விமான நிலையத்திலிருந்து சேவை வழங்க தனியார் விமான நிறுவனங்கள் ஆரம்பத்திலிருந்தே பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. மகிந்த ராஜபக்ஷவின் பெயரில், அவரது சொந்த மாவட்டத்தில், அவரது ஆட்சிக் காலத்தில் இந்த விமானநிலையம் தவிர துறைமுகம் ஒன்றும் சர்வதேச மாநாட்டு மண்டபம் ஒன்றும் கலையரங்கம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மகிந்த ராஜபக்ஷ அட்சியின்போது மத்தள விமானநிலையத்தை மதிப்பீடு செய்ய சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கப்பட்டிருந்தனர்.
Leave a comment