கொழும்பு: மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வட கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை கடந்த கால அரசாங்கம் மக்களுக்கு சரியாக செய்து கொடுக்கவில்லை என மீள்குடியேற்றம் புனர்நிர்மாணம் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சராக இன்று (15) பதவியேற்ற டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் பெரும்பாலான மக்களை குடியேற்றிவிட்டு அவர்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தவறியதன் காரணமாக இன்று அந்த மக்கள் அன்றாட ஜீவியத்திற்கு போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அடாத்தாக கையகப்படுத்தப்பட்டிருக்கும் மக்களின் விவசாயக் காணிகளை உரிய மக்களுக்கு பெற்று கொடுத்து அவர்களுக்கான வாழ்வாதார வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த அரசாங்கம் கடந்த காலங்களில் மீள்குடியேற்றத்திற்கு மிகக் குறைந்தளவான நிதியினையே ஒதுக்கீடு செய்துள்ளார்கள் அந்நிதியினால் அவர்களுக்கான எந்த வேலைத்திட்டத்தினையும் முன்னெடுக்க முடியாது. எனவே வருங்காலங்களில் இது தொடர்பாக புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கலந்தாலோசித்து கூடுதல் நிதியினை பெற்று மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப தன்னாலான முழு பங்களிப்பையும் செய்யவுள்ளதாக இதன் போது அவர் கருத்து தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் யுத்தத்தின் போது அழிவுக்குள்ளான வடகிழக்கு மாகாணங்களில் உள்ள கோயில்களை விரைவாக புனர்நிர்மாணம் செய்யவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.அத்துடன் ஏனைய சமூகங்களின் புனித யாத்திரைகளுக்கு வழங்கப்படுகின்ற கௌரவம் போன்று சபரிமலை செல்லும் யாத்திரியர்களுக்கும் விமான நிலையங்களில் உரிய கௌரவம் அழிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இவ்வேலைத்திட்டத்தினை முன்கொண்டு செல்ல கட்சி வேறுபாடுகளை மறந்து அனைத்து தமிழ் கட்சி தலைமைகளும் இவ்வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றுபட்டு செயற்பட முன்வருமாறு இத்தருனத்தில் அழைப்பு விடுப்பதாகவும் இதன் போது தெரிவித்தார்.
ஏ.எல்.எம்.தாஹிர்
ஊடகப்பிரிவு
Published by



Leave a comment