ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உலமா கட்சி வாழ்த்து

Majeed – பழுலுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு: நாட்டின் ஆறாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உலமா கட்சி வாழ்த்து தெரிவித்திருப்பதுடன் தமிழ் முஸ்லிம்களின் வாக்குகளால் அவர் வெற்றி பெற்றுள்ளதனால் அம்மக்களின் உரிமைகளை வழங்குவார் என தாம் எதிர் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இது பற்றி முஸ்லிம் உலமா கட்சித் தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் மௌலவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

ஜனாதிபதி மைத்திரிபாலவின் வெற்றி என்பது இந்த நாட்டின் நிலையான ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாகும். ஜனாதிபதி தேர்தலின் போது முன்னைய அரசாங்கம் நீதியாகவும் சுதந்திரமாகவும் தேர்தலை நடத்தியதன் காரணமாக மக்கள் தமது ஜனநாயக உரிமையை தங்கு தடையின்றி நிறை வேற்றியுள்ளார்கள்.

இதற்காக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கத்தை நாம் பாராட்டத்தான் வேண்டும்.

குறிப்பாக கடந்த காலங்களை விட வட மாகாண தமிழ் மக்கள் மிக மிக சுதந்திரமாக வாக்களித்துள்ளார்கள்.

இத்தகைய சிறந்ததொரு சூழல் ஏற்பட்டமை மகிழ்வைத்தருகிறது.

நாட்டின் பல தேர்தல் தொகுதிகளை பார்க்கும் போது சிங்கள மக்கள் பெருவாரியாக வாழும் பெரும்பாலான பகுதிகளில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருப்பதையும் தமிழ் முஸ்லிம்களின் பகுதிகளில் மட்டுமே பாரிய வித்தியாசத்தில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றிருப்பதையும் பார்க்கும் போது தமிழ் முஸ்லிம் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளார் என்பது தெரிகிறது. இந்த நம்பிக்கiயை அவர் தக்க வைத்து தமிழ் முஸ்லிம்களின் பிரச்சினைகளை இழுத்தடிக்காது உடனடியாக தீர்ப்பார் என்று நாம் நம்புகிறோம்.

இதற்குரிய வழிகளை அவரோடிருக்கும் தமிழ் முஸ்லிம் கட்சிகள் முனைப்புடன் செயற்படுத்தும் என நம்புகிறோம்.

இந்த வகையில் வடக்கில், கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளை அவர்களிடமே வழங்குவதுடன் முழுமையான மீள் குடியேற்றமும் உடனடியாக நடை பெறுவதுடன் சுனாமியால் பரிதிக்கப்பட்ட மக்களின் வீடில்லா பிரச்சினையும் தீர்க்கப்படும் என எதிர் பார்க்கிறோம். அதே போல் முஸ்லிம்களின் ஹலால் உரிமையை மீண்டும் வழங்குமுகமாக ஹலால் அனுமதி பத்திரம் வழங்கும் உரிமையை மீண்டும் ஜம்இய்யத்துல் உலமாவுக்கு வழங்குவதுடன் தாக்கப்பட்ட அனைத்து பள்ளிவாயல்களுக்கும் ஜனாதிபதி நஷ்ட ஈடு வழங்குவார் என்றும் உலமா கட்சி எதிர் பார்க்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபாலவின் இத்தகைய நல்லாட்சி முயற்சிகளுக்கு உலமா கட்சி தனது முழு ஆதரவையும் வழங்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என முபாறக் மௌலவி மேலும் தெரிவித்துள்ளார்.

Published by

2 responses to “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உலமா கட்சி வாழ்த்து”

  1. Maanam kettavan

  2. Iva_da vaayila yaaraavathu pealu_gappaa, ore arikkaiyaay virraan

Leave a comment