இர்ஷாத் றஹ்மத்துல்லா
கொழும்பு: நேற்று இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வாக்களித்து என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக இன்று 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சற்று முன்னர் சத்தியப் பிரமானம் செய்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தற்போது இடம் பெற்றுக் கொண்டிருக்கும் சத்திய பிரமாண நிகழ்வில் நாடடு மக்களுக்கு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் இங்கு உரையாற்றுகையில் கூறியதாவது,
சமூக, அரசியல், பொருளாதார தொடர்பாக எம்மால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தினை உரிய முறையில் நடை முறைப்படுத்தவுள்ளேன். இந்த வேளையில் நாட்டு மக்களுக்கு ஒரு விடயத்தை கூறிக் கொள்ளவிரும்புகின்றேன். இரண்டாவது முறையோ அல்லது அதற்கு மேலாகவோ ஜனாதிபதியாக நான் போட்டியிடமாட்டேன். நாட்டடின் சட்டம், ஓழுங்கு, மக்களது அபிலாஷைகள் என்பனவற்றை மதித்து எனது பணியினை முன்னெடுக்கவுள்ளேன்.அதே போல் இந்த நாட்டின் ஒரு பிரஜைக்கு என்ன உரிமைகள் இருக்கின்றதோ அதற்கும் நான் கட்டுப்பட்டு எனது செயற்பாடுகளை முன்னெடுப்பேன்.
இந்த தேர்தல் என்பது இவ்வளவு இலகுவானது அல்ல. பொது வேட்பாளர் ஒரு வர் தேர்தலில் போட்டியிடுவது என்பது அவ்வளவு இலகுவானதல்ல. குறிப்பாக அரச ஊடகங்கள் என்மீது கடுமையான வசைபாடல்களை தொடுத்தன. ஒரு ஊடகம் கடைபிடிக்க வேண்டிய தர்மத்தைமீறி என்மீது சேறு பூசியது அதனையும் கடந்து எனது நீண்டகால அரசியல் அனுபவத்தின் ஊடக அதனை வெல்ல முடிந்தது.
எனக்கு எதிராக செயற்பட்டது மட்டுமல்லாமல், எனது ஆதவாளர்ககள் மீது கடுமையான தாக்குதல்கள், மேடைளுக்கு தீ வைத்தல் போன்ற சம்பவங்களும், ஆதராவாளர் கொல்லப்பட்ட சம்பவத்தினாலும் நான் பெரும் கவலையடைந்துள்ளேன். இதுவல்ல அரசியல் இதனை விட முன்னேற்றகரமான அரசியலை செய்ய நான் திடசங்கட்பம் கொண்டுள்ளேன்.
இலங்கையின் முதலாவது பிரதமர் டி .எஸ். சேனாநாயக்கவின் இந்த இடத்தில் நான் நின்று நினைவு கூறுகின்றேன். எஸ்.டபிளயூ.ஆர். பண்டார நாயக்க பேன்ற தலைவர்கள் எமக்கு நேரிய கௌரவமிக்க அரசியலை கற்றுக் கொடுத்துள்ளனர். அவர்களது அரசியல் பாதையில் இன்னும் பல்வேறு விடயங்களுடன் எனது ஆட்சியினை நான் முன்னெடுக்கவுள்ளேன்.
சர்வதேச நாடுகள், அமைப்புக்கள், நிறுவனங்களின் உதவிகளை இந்த நாட்டின் அபிவிருத்திக்கு பெற்று சர்வதேச உறவுகளை வலுப்படுத்தவுள்ளேன்.
பொது வேட்பாளராக என்னை தெரிவு செய்யும் போராட்டத்தில் ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் எடுத்த பிரயத்தனம், அது போன்று ஜெனரல் சரத் பொன்சேகா, சம்பிக்க ரணவக்க, றிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட 49 அமைப்புக்கள் ஒன்றுபட்டு இந்த வெற்றியினை பெற்றுக் கொடுததுள்ளன. அதே வேளை ஜே.வி.பி இந்த தேர்தலுக்கு வழங்கிய பங்களிப்பு அளப்பறியது அதற்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
இந்த தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த உதவிய தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர்களுக்கு எனது நன்றிகள், இந்த பதவியை ஏற்பதற்கு எவ்வித தடங்களுக்கும் இன்றி ஜனநாயக முறையில் பதவி பிரமானம் செய்ய உதவிய முன்னால் ஜனாதிபதி எனது நண்பர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்த வேளையில் நன்றி கூறுகின்றேன்.
புதிய அரசியல் கலாசாரம் ஒன்றினை ஏற்படுத்த அனைவரும் முழுமையான உதவிகளை செய்ய வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை எம்மிடம் ஒப்படைத்துள்ள இந்த வேளையில் அரசியல் வாதியின் கடமை என்ன என்பதை நன்கறிந்து அதன் வழியில் செயற்படுவதுடன், ஊழல், மோசடிகளை இல்லாமல் ஆக்கி நாட்டுக்கும் ஜனநாயகத்தை நிலைநாட்டி நல்லாட்சியினை ஏற்படுத்த நான் உறுதி பூண்டுள்ளேன். என்றும் அவர் இதன் போது கூறினார்.
Published by

Leave a comment