சிறுபான்மை மக்களுக்கு எதிராக எவர் செயற்பட்டாலும் இத்தோ்தல் அவா்களுக்கு ஒரு பாடமாக அமையும் – ஹரீஸ் எம்.பி

Harees MPssஹாசிப் யாஸீன்

திகாமடுல்ல: தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும்  தக்க தருணத்தில் எடுத்த முடிவும் பெரும்பான்மை மக்களின் நடுநிலை முடிவும் இந்த நாட்டில் நிரந்தர அமைதி சமாதானத்தை ஏற்படுத்தி நாட்டின் ஸ்திரத் தன்மையை பாதுகாக்கும் என திகாமடுல்ல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் முஸ்லிம் மக்கள் 90 வீதமானவர்கள் பொது வேட்பாளரை ஆதரித்து அவரை வெற்றி பெறச் செய்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர ஸூம் மைத்திரிக்கு ஆதரவு வழங்க முன் வந்தபோது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் வெற்றி உறுதிப்படுத்தப் பட்டதாக தெரிவித்தவர்களுக்கு இந்த தேர்தல் முடிவு நல்லதொரு பாடத்தைக் கொடுத்துள்ளது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களை ஒரு போதும் புறக்கணிக்க முடியாது என்ற நிலையை இந்த தேர்தல் முடிவு  காட்டியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பலர் பல பிரிவினைகளை ஏற்படுத்த முற்பட்டபோதிலும் இறைவன் சதிகளில் இருந்து எமது மக்களைப் பாதுகாத்துள்ளான்.

நான் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற கல்முனை தொகுதியில் 44 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை மக்கள் பொது வேட்பாளருக்கு அளித்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களான தமிழ், முஸ்லிம் மக்கள் ஒரு இலட்சத்துப் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை வழங்கியுள்ளனர்.

நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்த ஒன்றுபட்டு வாக்களித்த தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக எனது கல்முனைத் தொகுதியிலும் அம்பாறை மாவட்டத்திலும் ஒன்றுபட்டு வாக்களித்த மக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சிறுபான்மை சமூகங்களின் இந்த தீர்மானமானது ஒரு வரலாற்று தடம் பதிக்கும் செயல் எனவும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக எவர் செயற்பட்டாலும் இது ஒரு பாடமாக அமையும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment