காத்தான்குடி: பொது வேட்பாளர் மைத்திரதிபால சிரிசேனாவை ஆதரித்து இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி கடற்கரையில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அமீர் அலி மற்றும் அஸாட் சாலி ஆகியோரும் உரையாற்றியிருந்தனர்.
இத்தேர்தல் பிரச்சாரம் சிறப்பாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது, பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் இக்கூட்டத்திற்குள் நுழைந்து, ‘ஹிஸ்புல்லாஹ் சேரைப் பற்றி தகாத வார்த்தைகள் பேசுவதோ அவரை ஏசுவதோ இங்கு தவிர்க்கப்பட வேண்டும்’ என அதிகாரக் கட்டளையிட்டு செல்கையில், கடற்கரையில் கூட்டத்தைக் காண திரண்டிருந்த மக்களுக்கும், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களுக்குமிடையே சில முறுகல்கள் ஏற்பட்டன. ஆனாலும் பின்னர் கூட்டம் சுமுகமாக இடம்பெற்றது.
அஸாட் சாலி உரையாற்றும்போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை தனது உரையில் தாக்கிகியிருந்த காரணத்தால், தங்களது ஆளடையாளங்களை மறைத்த ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் சிலர், பொது வேட்பாளர் மைத்தரியை ஆதரித்து, காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் காரியாலயத்தை பலமாகத் தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர். அஸாட் சாலி உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே குறித்த தேர்தல் காரியாலயம் உடைக்கப்பட்டது.
இத்தாக்குதல் இடம்பெற்ற வேளையில் தாக்குதலில் ஈடுபட்டிருந்தவர்களை தாங்கள் அடையாளம் கண்டிருப்பதாக சம்பவத்தை நேரில்கண்ட பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சிலர் தங்களது கைத்தொலைபேசியில் மறைமுகமாக வீடியோ செய்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இத்தாக்குதலில் பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் தேர்தல் காரியாலயம் பலமாகத் தாக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தின் கதிரைகள், ஆதரவாளர்களின் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளியில் அமைக்கப்பட்டுள்ள பதாதைகள் உடைக்கப்பட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு அதிகளவான பொதுமக்கள் திரண்டடிருக்கின்றனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by





Leave a comment