கொழும்பு: முஸ்லிம் விரோதிகளான அத்துரலிய தேரர், சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேக்கா, சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருடன் இணைந்து அரசியல் செய்ய ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீனுக்கு எவ்வாறு மனம் வந்ததென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன முஸ்லிம்களுக்காக எச்சந்தர்ப்பத்திலும் குரல் கொடுக்காதவர், இவரை நாட்டின் ஜனாதிபதியாக மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்தின் பியகம, கிரிந்திவெல, நிட்டம்புவ, மினுவாங்கொடை ஆகிய பிரதேசங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து நடைபெற்ற பிரதான பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஜாதிக்க ஹெல உருமயவைச் சேர்ந்த அத்துரலிய தேரரே முதன் முதலில் ஹலால் பிரச்சினையை கிளப்பி விட்டார். காவியுடை அணிந்த அனைவரையும் அழைத்துச் சென்று அக்குரணையிலும் ஏனைய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் செய்தார். இவருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் ஸ்ரீலங்கா மக்கள் காங்கிரஸ¤ம் ஒன்று சேருவது எப்படி.
“அதான்” ஒலிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகக் கூறி உயர் நீதிமன்றத்துக்குச் சென்றவர் சம்பிக்க ரணவக்க. இவருடன் ரவூப் ஹக்கீமும் ரிஷாட் பதியுதீனும் எந்த மனத்துடன் ஒன்று சேர்ந்தனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகா, முஸ்லிம்களை இந்நாட்டின் வந்தேறு குடிகளெனவும் அவர்களது வீஸா காலம் முடிந்துவிட்டது. அவர்கள் வந்த இடத்திற்கே திரும்பிவிடலாமென வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்கு கூறியிருந்தார். இவர் ஆதரவு வழங்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கு முஸ்லிம்கள் எப்படி ஆதரவளிப்பது.
இதேபோன்று தான், பிரசார மேடைகளில் முஸ்லிம் பேச்சாளர்களை ஏற்றக் கூடாது என்ற உறுதிப்பாட்டில் மைத்திரிபால சிறிசேன உள்ளார்.பொலன்னறுவையில் பரம்பரையாக நெல்குத்தும் ஆலைகளை செய்து வந்த பணக்கார முஸ்லிம்களுக்குச் சொந்தமான 53 ஆலைகளை இரவோடு இரவாக மூடி அவர்களை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியவர் இந்த மைத்திரிபால சிறிசேனா என்பதனை எமது முஸ்லிம்கள் மறந்துவிடமாட்டார்கள். புலிகள், பொலன்னறுவை மாவட்டத்தின் அழிஞ்தபொத்தானை, பள்ளித்திடல் போன்ற கிராமங்களுக்குள் புகுந்து முஸ்லிம்களை மீன்களைப் போல வெட்டிக் குவித்த சமயத்தில் கூட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன அதுபற்றி ஒரு வார்தை கூட பேசியிருக்கவில்லை.
எப்படியோ ஹக்கீமும் ரிசாட்டும் அமைச்சின் சுகபோகங்களையெல்லாம் அனுபவித்துவிட்டு நம்பியிருந்த ஜனாதிபதிக்கு துரோகம் இழைத்துவிட்டு வரலாற்றில் மிகப்பெரிய பல்டியை அடித்தாலும், அந்தக் கட்சிகளின் கீழ்மட்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியை கைவிடவில்லை. அதாவுல்லா, ஹிஸ்புல்லா. சட்டத்தரணி என். எம். சஹீட் போன்றவர்கள் நிலைகுலையாமல் நின்று நம்பிக்கைத் துரோகம் செய்வது ஜனாதிபதிக்கு ஆதரவு அளிப்பதற்கு வீராவேசத்தோடு புறப்பட்டிருப்பது முஸ்லிம்களின் மானம் மரியாதையை காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
Published by

Leave a comment