காத்தான்குடி: முன்னாள் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி தேர்தல் காரியாலயத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கைகளின் கிழக்கு மாகாண விஜயத்தின் ஒரு கட்டமாகவே அவரின் இந்த விஜயம் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய அவர், ‘மாற்றத்திற்கான இந்த பாரிய வேலைத்திட்டத்தில் முஸ்லிம்கள் சார்பில் இணைந்து கொண்ட முதலாவது தரப்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியே உள்ளது. தற்போது இந்த வேலைத்திட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்களும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் எம்மோடு இணைந்துள்ளார்கள்.
கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு இந்த அரசாங்கம் கடும் அநீதிகளை இழைத்து வந்துள்ளது. குறிப்பாக எனது பேருவளைத் தொகுதி முஸ்லிம்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் இந்த அரசாங்கத்தோடு, ஜனாதிபதியோடு பிரச்சினைப் பட்டுக்கொள்வது வாக்கு வங்கிகளை அதிகரித்துக் கொள்வதற்காக இனவாதத்தை, மதவாதத்தைத் தூண்டும் இந்த செயல்கள் பற்றித்தான். இந்த நாட்டின் வரலாற்றில் உருவாகாத இன, மத வேறுபாடுகள், வன்முறைகள் இந்த ஜனாதிபதியின் ஆட்சியில்தான் ஏற்படுத்தப்பட்டது. அப்படியென்றால் ஒரு முஸ்லிம் அல்லது தமிழ் மகன் இந்த அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் வாக்களிப்பதென்றால் அது முழுக்க முழுக்க தன்னுடைய சுய இலாபத்துக்காகத்தான்.
இந்த நாட்டுக்காகவோ, இனத்துக்காகவோ தன்னுடைய சமூகத்துக்காகவோ அல்ல. நாங்கள் ஆரம்பித்து இருக்கின்ற இந்தப் பயணத்தில் மைத்திரிபால சிரிசேன அவர்கள் வெற்றிபெற்று அவர் ஆட்சி செய்கின்றபோது இந்த இந்த நாட்டிலே இன, மத, மொழி வேறுபாடற்ற எல்லோரும் ஐக்கியமாக வாழக்கூடிய ஒவ்வொரு இனத்தவரும் தன்னுடைய அடையாளத்தையும் தனித்துவத்தையும் சுதந்திரமாகப் பேணக்கூடிய நல்லதொரு நிலைமையை நாம் ஏற்படுத்துவோம்.
எனவே, எதிர்வரும் 8ம் திகதி அன்னச் சின்னத்துக்கு வாக்களித்து மைத்திரி அவர்களை வெற்றிபெறச் செய்வோம். அன்னச் சின்னத்தின் வெற்றி உங்களின் வெற்றி எனக் கூறிக்கொள்ள விரும்புவதோடு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் வெறிபெற வேண்டும் என வாழ்த்துகிறன்.’ என குறிப்பிட்டார்.
இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான், அதன் பொதுச்செயலாளர் MR. நஜா முஹம்மத், முன்னணியின் தேசிய அமைப்பாளர் MBM. பிர்தௌஸ் ஆகியோருடன் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் மற்றும் தலைமைத்துவ சபை உறுப்பினர்களும் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
Published by

Leave a comment