மன்னார்: நாட்டின் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல பிரதேசங்களிலும் வெள்ள நீர் நிரம்பியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்க இடம்பெயர்ந்து தற்காலிக தங்குமிடங்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்நிலையில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமைகளை நேரில் பார்வையிடுவதற்காக வடக்கு மாகாணசபை உறுப்பினரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினருமான அஸ்மின் அவர்கள் மன்னார் மாவட்டத்தின் நானாட்டான், முசலி, மடு, மாந்தை மேற்கு உள்ளுட்ட பிரதேசங்களுக்கு நேற்று (27.12.2014) சென்றிருந்தார்.
இதன்போது நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 869 குடும்பங்களைச் சேர்ந்த 2880 பேரும், முசலி பிரதே செயலக பிரிவில் 254 குடும்பங்களைச் சேர்ந்த 965 பேரும், மாந்தை பிரதேச செயலகப் பிரிவில் 300 குடும்பங்களைச் சேர்ந்த 948 இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின், இவர்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள் பிரதேச செயலாளரினால் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் இம்மக்களுக்குரிய பால்மா மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் இவர்களுக்குத் தேவையான நில விரிப்புக்கள், போர்வைகள், நுளம்பு வலைகள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் (பம்பஸ், ஓடிகுலோன்) தேவைப்படுவதாகவும் அஸ்மின் குறிப்பிட்டார்.
இந்த அத்தியாவசியப் பொருட்களை வழங்க விரும்பும் தனவந்தர்கள் உரியவர்களைத் தொடர்புகொண்டு வழங்கி வைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திலும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை இம்மக்களுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பில் சிறியளவிலான உதவித் திட்டங்களையும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வழங்கிவைத்தார்.
Published by

Leave a comment