கொழும்பு: என்னை கொலை செய்ய காத்திருப்பதாக மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். எனது தந்தையின் உடலுக்குள் 43 துப்பாக்கி தோட்டாக்கள் துளைக்கப்பட்டிருந்தன. போதைப் பொருள் வர்த்தகர்கள் இன்று நாட்டில் சுதந்திரமாக உலவித் திரிகின்றனர். எனது எதிரிகள் என் மீது அசிட் வீசவும் கொலை செய்யவும் காத்திருக்கின்றார்கள்.
எனது தந்தையின் மரணம் தொடர்பில் நியாயம் கோரி நிற்பதே இதற்கான காரணமாகும். தந்தையின் உடல் தீயில் சங்கமித்த தினத்தில் ஜனாதிபதி எனக்கு தொலைபேசி மூலம் நாட்டில் கிளர்ச்சி ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என கோருகின்றார். நீர் ஓர் பெண் பிள்ளை தானே என கேட்டார்.
தந்தையின் கொலை குறித்த வழக்கு விசாரணைக்கு செல்லும் போது அம்மாவிற்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி, என்னை வழக்கு விசாரணைக்கு செல்ல வேண்டாம் என ஜனாதிபதி அறிவுறுத்தினார். எனது தந்தையின் மரணம் தொடர்பில் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும். ஜனாதிபதியின் மகனுக்கு ஒரு நீதியும், பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மகளுக்கு ஒரு நீதியும், கிராமத்தில் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு ஒரு நீதியும் இருக்க முடியாது.
அதற்காகவே நாம் நாட்டில் மைத்திரி ஆட்சி நிறுவப்பட வேண்டுமென கோருகின்றோம் என ஹிருணிகா பிரேமசந்திர அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Published by

Leave a comment