“எதிர்த்தரப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குப்பைத் தொட்டியில் வீசி எறியும் வெறும் கடதாசித் துண்டுகளே”: மஹிந்த

mahinda_rajapaksa_addresses[1]காலி: எதிர்த்தரப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து எவரும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அது குப்பைத் தொட்டியில் வீசி எறியும் வெறும் கடதாசித் துண்டுகளே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர் தரப்பு கூறுவது போல வடக்கிலிருந்து படையினரை அகற்றி நாட்டை துண்டாட ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். அது குறித்து அஞ்சத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

காலி, சமனல மைதானத்தில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, உங்கள் முன்னேற்றத்துக்கு பங்களிக்க நாம் அர்ப்பணித்துள்ளோம். அந்தப் பொறுப்பு எங்களுடையது. பாத யாத்திரை, மனிதச் சங்கிலி நடத்தி அன்று நாம் இளைஞர்களை பாதுகாத்தோம்.

வடக்கிலுள்ள படையினரை அகற்றி நாட்டை துண்டாட இடமளிக்க மாட்டோம். எதிர்த்தரப்பின் வாக்குறுதிகள் குறித்து நீங்கள் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால் 9 ஆம் திகதியும் நானே ஜனாதிபதி. எதிர்த்தரப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குப்பையில் இடும் வெறும் காகிதங்களே. இவர்களின் விஞ்ஞாபனம் குறித்து பொருட்படுத்தத் தேவையில்லை. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நான் பொறுப்பாக இருப்பேன்.

2005, 2010 தேர்தல்களில் தென்பகுதி மக்களே என் மீது கூடுதல் நம்பிக்கை வைத்தார்கள். 2005ல் நீங்கள் தந்த மக்கள் ஆணையை நிறைவேற்றினேன். அன்று நாம் பாத யாத்திரை சென்ற போது எனக்கு ஒத்துழைப்பு வழங்கினீர்கள். இங்கிருந்து கொழும்புக்கு துரிதமாக செல்ல முடியும். கிராமப் பொருளாதாரம் முன்னேறியுள்ளது.

2020 இல் 1 இலட்சம் மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்க இருக்கிறோம். எதிர் தரப்பு கூட்டணியின் விஞ்ஞாபனத்தில் கல்வியை புனரமைப்பதாக கூறப்பட்டுள்ளது. மாணவர்களிடம் கட்டணம் அறவிட திட்டமிட்டிருக்கிறார்கள். இலவச கல்வியை நசுக்க தயாராகிறார்கள். நாமிருக்கும்வரை இதற்கு இடமளியோம் இலவச கல்வியையும் இலவச சுகாதாரத்தையும் பாதுகாப்போம். ஒன்றரை இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்க நிதி ஒதுக்கியுள்ளோம்.

எனது வரவு செலவுத் திட்ட உரையில் ஒதுக்கிய நிதிக்கு மேலதிகமாக 500 ரூபா சேர்த்து வழங்க தயாராகிறார்கள். இது கிராமிய சபை தேர்தலல்ல. மகாமோதர ஆஸ்பத்திரியை முன்னேற்ற நிதி ஒதுக்கியுள்ளோம். எம்மை நம் புங்கள். இளைஞர்கள் குரூரமாக கொல்லப்பட்ட போது உங்களுக்காக குரல் கொடுத்தோம். வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற நாம் இடமளிக்க மாட்டோம். எதிர்தரப்பு விஞ்ஞாபனம் குப்பை கூடத்திற்குரிய காகிதங்களே. பாதுகாப்பான நாட்டை ஏற்படுத்து வேன்.

Published by

2 responses to ““எதிர்த்தரப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குப்பைத் தொட்டியில் வீசி எறியும் வெறும் கடதாசித் துண்டுகளே”: மஹிந்த”

  1. This has to be finalized by the voters of this country!

    January 8th is the day, which one of the Manifesto is thrown into dustbin!

Leave a reply to nizamhm1944 Cancel reply