அநுராதபுரம்: ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவினால்தான் முஸ்லிம்களின் எதிர்கால பாதுகாப்பும், நலன்களும் தொடர்ந்தும் உத்தரவாதப்படுத்தப்படும். இதனை முஸ்லிம்கள் நன்கு உணர்ந்து உள்ளனர். மூன்றாவது முறையும் அவரை ஜனாதிபதியாக்க முஸ்லிம்கள் என்றோ முடிவெடுத்து விட்டார்கள் என்று ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார, தகவல் ஊடக சிரேஷ்ட ஆலோசகரான ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக் கூட்டத்தைத் தொடர்ந்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அநுராதபுரத்தில் திரண்ட ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் ஜனாதிபதியின் பெரு வெற்றியை உறுதிப்படுத்திவிட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.நாட்டை பயங்கரவாதத்தில் இருந்தும் அழிவிலி ருந்தும் காத்த ஜனாதிபதிக்கு மக்கள் தம்முடைய முழு ஆதரவையும் வழங்குகின்றனர். பொலன்னறுவை, அநுராதபுரம் உட்பட ஏனைய பல பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து பலதரப்பட்டோரின் கருத்துக்களை ஆராய்ந்த போது ஜனாதிபதிக்கே இத்தேர்தலில் வெற்றி நிச்சயமாகிவிட்டதை காண முடிந்தது.
அந்நிய சதியில் இருந்து இந்த நாட்டை அவராலேயே பாதுகாக்க முடியுமென்பதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தாம் கேட்காமலேயே தமக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் என்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். எவ்வித பிரசாரங்களும் இன்றி முஸ்லிம்கள் தமக்கு வாக்களிப்பது உறுதியென்று சந்திரிகா பண்டாரநாயக்க கூறியிருக்கிறார்.
இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு இடமில்லை என்று சரத் பென்சேகா முன்னர் கூறியுள்ளார். முஸ்லிம்களை நாங்கள் கவனிக்கத் தேவையில்லையென்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்களை முஸ்லிம்கள் மீட்டிப் பார்க்கும் போது இந்த அணியினரின் எண்ணப்பாடுகள் தெளிவாக புரிகின்றன. முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக செயற்பட மாட்டார்கள். அவர்களின் அரசியல் அபிலாஷைகள் சிறந்தவை. இவ்வாறு அஸ்வர் தெரிவித்துள்ளார்.
Published by

Leave a reply to Azhar Cancel reply