“மைத்திரி வென்றால் 100 நாட்களில் தகவலறியும் சட்டம்”: ரனில்
கொழும்பு: ஜனாதிபதி தேர்தலுக்கான, எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால், அவர் வென்ற நூறு நாட்களுக்குள் தகவல் அறியும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமென்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நேற்று கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
தகவல் அறியும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு தனது கட்சி பல முறை முயற்சி செய்த போதிலும் தற்போதைய அரசாங்கம் அதற்கு ஒத்துழைப்பு வழங்காதமை காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்ததாக ரனில் கூறினார். எனினும் தற்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்ஷ தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் ஊடக சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளனர்.
பொதுவேட்பாளர் மைத்திரியுடன் ஐ.தே.க. தலைவர் ரனில்
மகிந்த ராஜபக்ஷ மாத்திரமே ஊடக சுதந்திரம் சம்பந்தமாக எதுவும் குறிப்பிடாமல் இருக்கின்றார். எனவே மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியின் பின்பு பறிக்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரம் மீண்டும் நிலைநாட்டப்படும் என்றார் ரனில் விக்ரமசிங்க. அதே போன்று நுறு நாட்களுக்குள் தகவல் அறியும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமென்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்க கூறினார்.
Leave a comment