காத்தான்குடி: துண்டுப் பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டிருந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் (PMGG) சூறாசபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவரினால் நேற்று (05.12.2014) தாக்கப்பட்டுள்ளார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்திற்கான துண்டுப் பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டிருந்தபோதே அவர் தாக்கப்பட்டார்.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் கர்ணி ஜும்ஆ பள்ளிவாயலின் அருகிலேயே மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுகுள்ளான சூறாசபை உறுப்பினர் இது தொடர்பில் விபரிக்கும் போது “எங்களது பொதுக்கூட்டம் தொடர்பான துண்டுப் பிரசுரத்தை மஸ்ஜிதுல் கர்ணி பள்ளிவாயலில் விநியோகித்துக் கொண்டிருந்தேன், அப்போது அங்கு வந்த நாசர் என்பவர் ‘என்ன கொடுக்கிறாய், இதெல்லாம் இங்கு கொடுக்கக் கூடாது’ என்று அச்சுறுத்தியதுடன், எனது கையிலிருந்த துண்டுப் பிரசுரங்களையும் பறித்தெடுத்தார். அத்தோடு என்னுடைய சேர்ட்டை பிடித்து இழுத்து அடிக்கவும் முனைந்தார் .” என்று கூறினார்.
மேற்படி தாக்குதல் நடத்திய நபரான நாசர் என்பவர் , முன்னர் காத்தான்குடி வைத்திய சாலையில் சிற்றூழியராக நியமனம் பெற்று தற்போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் காத்தான்குடி அலுவலகத்தில் உதவியாளராக கடமையாற்றுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published by
![PMGG-Logo[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/pmgg-logo1.jpg?w=150&h=90)
Leave a comment