விடைத்தாள் திருத்துபவரை குழப்பமடைய செய்யும் விதத்தில் பரீட்சை எழுத வேண்டாம்!

news_2008_8_images_newslanka_exams[1]கல்வி வாழ்க்கையில் உயர்வடைவதற்கு பரீட்சைகள் உதவுகின்றன. அந்த வகையில் ஓ.எல். பரீட்சை என்பது முதலாவது தலைவாசல் என்பதில் சந்தேகமில்லை. இப்பரீட்சைதான் நமது பதினொரு வருட கல்வி வாழ்க்கையின் அடையாளம். இதில் வெற்றிபெறவில்லையாயின் நீங்கள் படித்ததற்கு அடையாளம் இல்லாமல் போய்விடும்.

இருந்த போதிலும் பரீட்சையில் தோற்பவர்கள் அனைவரும் அறிவில் குறைந்தவர்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீனிடம், கல்வி என்பது என்ன? என்று ஒருவர் கேட்ட போது அதற்கு, “நீங்கள் உங்கள் பள்ளிக்கூடத்தை விட்டு வந்து பல வருடம் ஆகியும், உங்கள் மனதில் அங்கு கற்ற விடயங்களில் எது நினைவில் இருக்கிறதோ…. அதுதான் நீங்கள் உண்மையில் பெற்ற கல்வி” என்று கூறினார்.

உங்கள் மகன் நன்றாகப் படிப்பானா என உங்கள் தந்தையிடம் முகம் சுழித்துக்கேட்டவர்கள், பெற்றால் உங்கள் பிள்ளையைப் போலதான் பெறவேண்டும் என உங்கள் தந்தையிடம் கூறுவதற்கு சான்று பதிப்பது பரீட்சையாகும் என்பதில் ஐயமில்லை.

பரீட்சை என்றவுடன் எல்லோர் மனதிலும் ஒரு பதற்றம், அச்சம் ஏற்படுவது உண்மைதான். ஆனால் பரீட்சையின் நோக்கம் நம்மைப் பயமூட்டுவது அல்ல. பரீட்சைகள் நடைபெறுவது நம்மை வெற்றியடையச் செய்வதற்காகத்தான் என்பதில் நாம் எல்லோரும் உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும். இந்த நம்பிக்கை உங்களுக்கு தைரியத்தையும் உளச் சக்தியையும் அதிகரிக்கும்.

பரீட்சையில் வெற்றி பெறுவது உங்கள் கையில்தான் உள்ளது. பரீட்சையின் வெற்றி என்பது நீங்கள் பெறப்போகும் அதிக புள்ளிகளைக் குறிக்கும். அதிக புள்ளிகளைப் பெறுவது பாடத்தில் உங்களிடம் உள்ள அறிவைப் பொறுத்தே கிடைக்கும். ஆனால் பரீட்சையில் உங்களிடம் பெறுவது என்பது, நீங்கள் பரீட்சைக்கு எப்படித் தயாராகுகின்aர்கள் என்பதைக் குறிக்கும்.

பரீட்சையின் மூலம் பாடத்திட்டத்தில் குறித்த தேர்ச்சியை அடைந்துள்Zர்களா என்பது பரீட்சிக்கப்படுகின்றது. இருந்தபோதிலும் உங்களின் அறிவை அளவிடும் அளவுகோல் பரீட்சையாக இருக்க முடியாது. அது உங்களின் பாடத்திட்டத்திற்கு ஏற்ற அறிவை மட்டும் பரீட்சிக்கும். பரீட்சை குறிப்பிட்ட நேரத்தினுள் எழுதி முடிக்க வேண்டிய தேவை இருப்பதனால் அறிவு அதிகளவில் இருந்தும் இக்குறித்த நேரத்தில் எழுதி முடிக்கத் தவறுவதனால் சித்தியடைய முடியாத நிலை ஏற்படலாம்.

இதனால் நீங்கள் அறிவில் குறைந்தவர்கள் என்று அர்த்தம் அல்ல. மாறாக நீங்கள் பரீட்சைக்கு உரிய பயிற்சி பெறாதவர்கள் என்ற உண்மையை பரீட்சையில் சித்தியடையத் தவறியவர்கள், அறிவில் குறைந்தவர்கள், படிக்காதவர்கள் என்பதாகும். அப்படியென்றால் நீங்கள் பதினொரு வருடங்களாக படிக்கவில்லையா? உங்களில் அறிவு வளர்ச்சி ஏற்படவில்லையா?

நீங்கள் கற்ற விடயங்களைக் கொண்டு பரீட்சையில் வெற்றி கொள்ள உடல் உள ரீதியாக தயாராகுதல் வேண்டும். நீங்கள் பரீட்சையில் வெற்றி பெறுவதற்கு தேவையான பாட ரீதியான அறிவினைப் பெற்றிருப்பீர்கள் என நம்புகின்றேன். இப்போது உங்களுக்குத் தேவை பரீட்சையை வெற்றி கொள்வது தொடர்பான விடயங்கள், எனவேதான் இது விடயம் தொடர்பாக அதிக விடயங்களை விபரமாகப் பார்ப்போம்.

news_2008_8_images_newslanka_exams[1]

முதலில் உங்கள் மனதில் “நான் பரீட்சையில் சித்தியடைவேன்” என்ற உள ரீதியான நம்பிக்கை வரவேண்டும். அத்துடன் பரீட்சை நெருங்க நெருங்க அது வளர வேண்டும். சில மாணவர்கள் பரீட்சைக் காலம் நெருங்கியதும் பயப்படுகின்றார்கள். இதனை உளவியலாளர்கள் ‘பரீட்சை மனப்பதகளிப்பு’ என்று அழைப்பார்கள். இவ்வாறான நிலைமையில் படித்த விடயங்கள் மறந்தது போன்று தோன்றும்.

இது இன்னும் சிக்கலான உளச் சோர்வினை ஏற்படுத்தும். மேலும் தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம், பசியை உணராமை, தலைவலி, கோபம், பய உணர்வு, கவலை, அவதானம் குறைவடைதல், குழப்ப நிலை போன்ற உடல், உளரீதியான மாறுதல்கள் ஏற்படுவதைக் காணலாம், பரீட்சையைக் கண்டு பயந்தால் அது உங்களைத் துரத்தும். எதிர்த்து நின்று பாருங்கள். உங்களைக் கண்டு அது ஓடும். இப்பயத்தினை பரீட்சை எழுதிப் பழகுவதன் மூலம்தான் போக்க முடியும். இதனை நமது முன்னோர் ‘முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்’ என்று கூறுவதை நினைத்துப் பாருங்கள்.

எவ்வளவுதான் படித்திருந்தாலும் பரீட்சை அறையில் சிறிது பதற்றம் ஏற்படுவது உண்மைதான. என்றாலும் வினாத்தாளைப் பார்த்ததும் பயம் ஓடிவிடும். காரணம் நீங்கள் படித்த விடயங்கள் வினாத்தாளில் இருக்கும். நீங்கள் முழுமையாக படிக்காவிட்டாலும் படித்ததைக் கொண்டு பரீட்சை எழுதுவோம் என்ற தைரியத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பரீட்சைக்கு இருவர் பயப்படமாட்டார்கள். ஒருவர் மிக நன்றாகப் படித்தவர். மற்றவர் எதையும் படிக்காதவர். நீங்கள் இருவருக்கும் இடைப்பட்டவராக இருப்பதனால்தான் பயம் ஏற்படுகின்றனது.

exam_tips[1]

பரீட்சை என்பது எவ்வளவு அதிகம் படித்திருக்கின்றோம் என்பதல்ல. எவ்வளவு விரைவில் வினாக்களுக்கு விடை எழுதுகிறோம் என்பதுதான். பரீட்சையின் போது நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நுட்பங்களைப் பற்றி அறிந்திருப்பது உதவியாக இருக்கும் இவற்றை நடைமுறைப்படுத்திப்பாருங்கள்.

பரீட்சைக்கு முந்திய நாள் இரவில் நன்றாக நித்திரை கொள்ளுங்கள்.

பரீட்சைக்கு முன்தினம் குறிப்பிட்ட பாடத்தினை மேலோட்டமாக ஒருமுறை கண்களை மூடி நினைவுபடுத்தி பாருங்கள்.

காலையில் கண்விழித்தவுடன் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

பரீட்சையில் நேரமுகாமைத்துவம் முக்கியமானது என்பதனால் செல்லும் போது கைக்கடிகாரத்தை எடுத்துச் செல்லுங்கள்.

பரீட்சைக்குச் செல்லும் போது இரண்டு பேனா, ரப்பர், அடிமட்டம், பென்சில், பென்சில் தீட்டும் கருவி ஆகியவற்றைக் கொண்ட பெட்டியை எடுத்துச் செல்லுங்கள். இவற்றை பரீட்சை முடியும் வரை பாதுகாத்து வையுங்கள். பரீட்சைக்குத் தேவையான அடையாள அட்டை, அனுமதி அட்டை என்பவற்றை மறவாது எடுத்துச் செல்லுங்கள். கண்ணாடி பாவிப்பவராக இருந்தால் அதையும் எடுத்துச் செல்லுங்கள்.

பரீட்சைக்குச் செல்லும் போது போஷாக்கான எளிய உணவுகளை உட்கொள்ளுங்கள்.

பரீட்சை தொடங்குவதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னராக பரீட்சை நிலையத்திற்குச் செல்லுங்கள்.

பரீட்சை மண்டபத்தினுள் சென்றதும் தனது கதிரையில் அமர்ந்து மெதுவாக கண்களை மூடி பலதடவை ஆழமாக மூச்சை எடுத்து விடுங்கள். அவ்வாறு இருந்தவாறு சிறிது நேரத்தின் பின்னர் உங்களுக்கு மகிழ்ச்சியான விருப்பமான ஒன்றை நினைத்து மனதை அமைதியடையச் செய்து பின்னர் ‘பரீட்சையை என்னால் வெற்றி கொள்ள முடியும் என்பதை’ பலதட வைகள் கூறி கண்க ளைத் திறவுங்கள்.

இவற்றையெல்லாம் பரீட்சை வினாத்தாள் கிடைப்பதற்கு முன்னர் செய்து முடித்துக்கொள் ளுங்கள். ஒரு பரீட்சை எழுதி விட்டு எழுதிய விடைகளைப் பற்றி சரி, பிழை பார்க்கா தீர்கள். அனைத்துப் பரீட்சைகளும் முடிந்த பின்னர் இதனைச் செய்வது நல்லது. அடுத்த பரீட்சைக்குத் தயாராகுங்கள்.

பரீட்சைக் காலங்களில் படிக்கும் போது உங்கள் கவனம் சிதறாத அமைதியான சூழலில் படியுங்கள்.

இறைவணக்கம் மற்றும் தியானப் பயிற்சிகளை செய்யுங்கள். இதனால் மனம் அமைதி பெறும்.

கஷ்டமான பிடிக்காத பாடங்களின் பரீட்சையை விருப்பத்தோடு எதிர்கொள்ளுங்கள்.

பரீட்சைக்காலங்களில் புதிய கற்றல் முறைகளை கடைப்பிடிக்காதீர்கள். வழமையான கால அட்டவணையை கடைப்பிடியுங்கள். அதிகம் கண்விழித்துப் படிப்பது உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதுடன் நினைவாற்றலைக் குறைத்துவிடும்.

பரீட்சைக் காலங்களில் வீட்டை ஜெயில் அறையாக மாற்றாதீர்கள். வெளியில் சென்று பொழுதுபோக்குகளுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும். அப்போது உங்கள் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.

பரீட்சைக் காலங்களில் இணைய சமூக வலைத்தளங்களுடன் (பேஸ்புக்) தொடர்புகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். அவை உங்களை அறியாமலேயே நேரத்தை வீணடித்துவிடும்.

பரீட்சையில் மற்றவர்களின் விடையை பார்த்து எழுதி சித்தியடையலாம் என்ற மறையான சிந்தனைகளை தவிர்த்து நேராக நல்ல சிந்தனைகளை ஏற்படுத்துங்கள். படிக்காத பாடங்களைப் பற்றிக் கவலைப்படுவதை தவிர்த்து அதற்காக செலவு செய்யும் நேரத்தை படித்த பாடங்களை மீட்டிப்பார்ப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இக்கவலை படித்த பாடங்களை மறக்கடித்துவிடும். பரீட்சை மண்டபத்தினுள் சென்றவுடன் மற்றவர்கள் எதைப்படித்தார்கள் என்ற தகவல் சேகரிப்பதிலும் மற்றவர்கள் எவற்றையெல்லாம் படிக்கின்றார்கள் என்பதை அறிவதிலும் ஆர்வம் செலுத்தாதீர்கள். நீங்கள் படித்தவற்றை மட்டும் நினைவில் வைத்திருக்க முயற்சியுங்கள்.

ஒரு பாடத்திற்குத் தயாராகும் போது மற்றப் பாடப் பரீட்சையைப் பற்றி சிந்தியாதீர்கள். அது வந்த பிறகு பார்ப்போம் என்று தள்ளிப் போடுங்கள்.

பரீட்சை எழுதும் போது நல்ல கையெழுத்து பிழையின்றி இருப்பது வினாத்தாளை திருத்தும் ஆசிரியரை கவரக்கூடியதாக இருக்கும். இவ்வாறு அமையாத சந்தர்ப்பங்களில் புள்ளி குறைவடைந்துவிடும். சரியாக எழுதத் தெரியாத காரணத்தினால் நன்றாகப் படித்தவர்களும் குறைந்த புள்ளிகளைப் பெறுகின்றார்கள்.

பரீட்சை ஆரம்பித்து வினாத்தாள் தந்தவுடன் விடை எழுதாதீர்கள். எல்லா வினாக்களையும் ஒருமுறை வாசித்த பின்னர் எழுத ஆரம்பியுங்கள்.

விடை எழுதும் போது முதலில் தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதுங்கள். பின்னர் ஓரளவு தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதுங்கள். இருந்தும் தெரியாது என்று எந்த வினாவையும் விடக்கூடாது. ஆகக்குறைந்தது வினாவுக்குரிய இலக்கத்தையாவது எழுதி தெரிந்த விடையை எழுதுங்கள்.

பரீட்சை எழுதி முடிந்த பின்னர் விடைத்தாளை நன்றாக ஒருமுறை சரிபார்த்து விட்டுக் கொடுக்க வேண்டும். இதற்காக கடைசி பத்து நிமிடங்களை ஒதுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

கணிதப்பாடத்தை எழுதும்போது எண்களை மிகத் தெளிவாக எழுதப் பழகிக் கொள்ளுங்கள். சிலருக்கு நான்கும் ஒன்பதும் ஒரே மாதிரியாக இருக்கும்.

பல்தேர்வு வினாக்களுக்கு விடை எழுதும் போது எல்லா விடைகளையும் நன்கு விளங்கி பிழையான அல்லது பொருத்தமற்ற விடைகளை நீக்குங்கள். இறுதியில் மிஞ்சுவது சரியான விடையாக எடுத்துக் கொள்ளுங்கள்.

கட்டமைப்பு வினாக்களுக்கு விடை எழுதும் போது வினாவை நன்றாக விளங்கி சொந்த மொழி நடையில் சுருக்கமாகவும் சொற்களாக அல்லது ஒரு இரு வசனங்களில் விடை எழுதுங்கள்.

கட்டுரை வினாக்களுக்கு விடை எழுதும் போது வினாக்களுக்குரிய விடைகளை பந்தி பிரித்து உரிய தலைப்புகளை இட்டு எழுதுங்கள். எப்போதும் நீங்கள் எழுதும் விடைகள் விடைத்தாளை திருத்துபவரை குழப்பமடையச் செய்யக்கூடிய வகையில் அமையக்கூடாது. விடைகளைத் தெளிவாக எழுத முயற்சிக்க வேண்டும். விடைத்தாள் அழகாக இருக்க வேண்டும்.

அதன் ஒரங்களில் விடை எழுதிப் பார்த்தல், பெயர்களை எழுதுதல், கசக்குதல் போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். நீங்கள் எழுதும் விடைத்தாளைக் கொண்டே விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் உங்களையும் உங்கள் அறிவு மட்டத்தையும் விளங்கிக் கொள்கின்றார் என்பதை மறந்துவிடாதீர்கள். எழுத்துக்கள் பற்றி மு.மேத்தா அவர்கள், ‘என்னை அறியாதவர்க்கு அறிமுகப்படுத்தும் புகைப்படம்’ என்று குறிப்புடுகின்றார்.

எனவேதான் விடை தெரிந்தால் மட்டும் போதாது, அவ்விடையை எப்படி எழுதுவது என்பது மிகவும் முக்கியமானதாகும். எனவே, மாணவர்களே….. பரீட்சை என்பது வாழ்க்கையல்ல. அது நமது கல்வி, வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டும்தான். இதனைக் கண்டு பயப்படுவதை விடுத்து பரீட்சையை வெற்றி கொள்வதற்கு தயாராகுங்கள். உங்கள் வெற்றிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

– என்.எம். நெளஸாத்

(தினகரன்)

Published by

Leave a comment