அபுதாபி: அபுதாபியில் உள்ள ஷொப்பிங் மோல் ஒன்றில் பள்ளி ஆசிரியையான அமெரிக்க பெண்ணை இனந்தெரியாத பெண் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அந்த ஆசிரியை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். கத்தியால் குத்தியவர் ஃபர்தா அணிந்திருந்ததால் அவர் யார் என்பது தெரியவில்லை.
அமெரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண். விவாகரத்தான அவர் தனது 11 வயது இரட்டையர் மகன்களுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் தங்கி பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுத்து வந்தார். அபுதாபியின் ரீம் ஐலேண்டில் உள்ள பவ்டிக் ஷொப்பிங் மோலுக்கு திங்கட்கிழமை சென்றுள்ளார். அங்கு கழிவறை தொடர்பாக அவருக்கும்இ இன்னொரு பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஃபர்தா அணிந்த பெண், குறித்த ஆசிரியையை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த பெண் உடனடியாக ஷேக் கலிபா மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்த சம்பவம் பற்றி பொலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளியை தேடி வருகிறார்கள். ஃபர்தா அணிந்து, கையுறைகள் அணிந்திருந்தது ஆணா, பெண்ணா என தெரியவில்லை என்று பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அபுதாபியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by



Leave a comment