கொழும்பு: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை இன்னும் எடுக்கவில்லை என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறிவருகின்றது. இந்த பின்னணியில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை, அவரின் அழைப்பின் பேரில் நேற்று சனிக்கிழமை இரவு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
நாட்டின் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் இந்த சந்திப்பின்போது, ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார். ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பைத் தொடர்ந்து, முஸ்லிம்களின் பிரச்சனைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹசன் அலி தெரிவித்தார்.
அமைச்சர்களுடன் நடத்தப்படுகின்ற பேச்சுவார்த்தையின் பின்னரே, யாரை ஆதரிப்பது என்று முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீடம் கூடி இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
Published by


Leave a comment