நெருக்கடியில் இருந்து தப்பிக்க நாடாளுமன்றத்தை கலைக்க தயாராகும் அரசாங்கம்!

parliamentகொழும்பு: ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள சவாலில் வெற்றி பெறும் தந்திரமாக நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள். பொது வேட்பாளராக போட்டியிட உள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க முன்வரலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்

அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுக்க உள்ளதாக பெயரை குறிப்பிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிங்கள இணையத்தளம் ஒன்றிடம் கூறியுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியிழப்பதால், தமது சிறப்புரிமைகளை பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க பயன்படுத்த முடியாது. நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கை ஒன்று இதற்கு முன்னர் எடுக்கப்பட்டிருந்தை சுட்டிக்காட்டியுள்ள அவர், 1988 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஜே.ஆர். ஜயவர்தன நாடாளுமன்றத்தை கலைத்தார் எனவும் இதன் காரணமாக ஜே.ஆருக்கு இருந்த ஆறில் 5 பெரும்பான்மை பலம் புதிய ஜனாதிபதியாக தெரிவான ஆர்.பிரேமதாசவுக்கு இல்லாமல் போனதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் பதவிக்கு வந்து 100 நாட்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க போவதாக கூறியிருந்தார்.அவரது இந்த திட்டத்தை தவிடுபொடியாக்கும் நோக்கில் அரசாங்கம் நாடாளுமன்றத்தை கலைக்கும் தீர்மானத்தை எடுக்கலாம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்புக்கு பின்னர் விசேட நாடாளுமன்ற கூட்டத் தொடரை கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சி சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் அவர் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும் சில வேளை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையுடன் கூடிய இடைக்கால அரசாங்கத்திடமே நாட்டின் ஆட்சி பொறுப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளருக்கு ஆளும் கட்சியின் பெரும்பாலானோர் ஆதரவு வழங்குவதை அடுத்தே இது குறித்து ஆராயப்படுவதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.

மைத்திரிபால சிறிசேனவின் கட்சி பொதுச்செயலாளர் பதவி, அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரின் சுகாதார அமைச்சுப்பதவியை ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ளார். இந்தநிலையில் ஜே.ஆர் ஜெயவர்த்தன, ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைத்ததும், 1988 ஆம் ஆண்டு ஆர்.பிரேமதாஸ நாடாளுமன்றத்தை கலைத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக் கொண்டதையும் கருத்திற்கொண்டே இந்த முடிவு பற்றி யோசிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தரப்பு கூறியுள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதியன்று நாடாளுமன்ற விசேட அமர்வை அழைக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. அதற்கு சபாநாயகரும் அனுமதி வழங்கியுள்ளார். இந்தநிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுமானால், ஜனாதிபதி தலைமையிலான காபந்து அமைச்சரவை அரசாங்கம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment