கொழும்பு: ஜனாதிபதி தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளராக ஆளும் கூட்டணியின் முக்கிய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
இதனை கொழும்பில் நடைபெற்ற விடேச செய்தியாளர் மாநாட்டில் அவரே பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கத்தில் சுகாதாரத்துறை அமைச்சராகப் பணியாற்றிய அவர், அரசாங்கத்தின் ஊழல் நடவடிக்கைகள் அதிகாரத் துஷ்பிரயோகம் என்பவற்றினால் வெறுப்படைந்து அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு, தான் விருப்பம் தெரிவித்திருந்ததையடுத்து, எதிரணியினர் தன்னை பொது வேட்பாளராகத் தெரிவு செய்திருப்பதாக அவர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவுடன் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, துமிந்த திஸாநாயக்க, ரஜீவ விஜேசிங்க, எம்.கே.டி.எஸ். குணவர்தன உள்ளிட்ட அரசியல்வாதிகளும் அரசாங்கத்திலிருந்து விலகிக்கொண்டுள்ளதாக கொழும்பிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
புதிய நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.
இங்கு கருத்து தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, தன்னை பொது வேட்பாளராக தெரிவு செய்தமைக்காக அனைத்து தரப்பினருக்கும் பொது மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெறும் அவர் கலந்து கொண்ட செய்தியாளர் மாநாடு நேரடியாக தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
BBC Tamil
Published by


Leave a comment